மலர் மொட்டு போன்ற விழிகளை உடையவளே! சிட்டு போன்ற அழகான இளம் குழந்தைகளின் மழலைமொழி வாயில் செந்தமிழை மட்டும் தவிர்த்து மயக்குகின்ற மாற்று மொழி குழற வைக்கிறார் பார். மொட்டு போன்ற அவரது தளிர் கரங்கள் தொன்மை அறியா, முதிர்ச்சி பெறாத மொழிதனை எழுதிட மனதில் சிறிதும் ஒட்டாத ஊமை மொழிதனை அன்னியர் பாய்ச்சுகிறார் பார். மாறிவரும் முழு நிலையும் அறிந்துமே பட்டுப் பஞ்சனையில் படுத்து உறங்குகிறாயே! சட்டென்று விழித்தெழுந்து வெட்டு ஒன்று துண்டு இரண்டாக உன் கருத்தை தெளிவாக வீசி எறிந்து வென்றிடவா என்று செந்தமிழ் பாவையை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கின்றார்...
**********
சிட்டென் இளையோர் சிறுவாயில் செந்தமிழின்
மட்டு தவிர்த்துயரா மால்மொழியை ஊட்டுவர்காண்!
மொட்டேன் அவர்கை முதிரா மொழியெழுத
ஓட்டா தவர்நெஞ்சில் ஊமைமொழி பாய்ச்சுவர்காண்!
மொட்டேன் விழியாய்! முழுநிலையும் கண்டறிந்தே
பட்டின் படுக்கை படுத்துக் கிடத்தியே!
சட்டேன் றெழுவாய்! சளைக்காமல் நின்கருத்தை
வெட்டொன்று துண்டிரண்டாய் வீசேலோ ரெம்பாவாய்!29
*************
No comments:
Post a Comment