மல்லிபூ ....
பிச்சிபூ.....
முல்லைப்பூ ....
என
தொண்டை வரள
கூவி விற்றவளின்
கொண்டையில்
பூ வில்லை.....
பூ விற்கும் பூங்கோதைக்கு தலைநிறைய பூ வைக்க ஆசைதான் ஆனால் இயலவில்லை. சின்ன வயசுல இருந்து அவளுக்கு பூ வைக்கிறதுன்னா ரொம்ப ஆசை. அவளை அவளுடைய சினேகிதிங்க பூங்கோதைன்னு முழுப்பேரை சொல்லி கூப்பிட மாட்டாங்க. பூவு பூவுன்னு தான் கூப்பிடுவாங்க. பூங்கோதைன்னு என்று முழு பெயரும் அழகா கூப்பிட வேண்டியதுதானே அப்படின்னு அவங்க அம்மா கத்துவாங்க. ஆனாலும் அவளுகளும் பூவுன்னு தான் கூப்பிடுவாங்க இவளும் பூவுன்னு கூப்பிட்டா சந்தோசப்படுவா..
சின்ன வயசுல அவங்க அம்மா அழகா தலைவாரிபின்னி பூ வைச்சு பள்ளிக்கு அனுப்புவாங்க. அவள் பெரியவள் ஆனப்ப தாய் மாமன் அவ்வளவு நிறைய பூ வாங்கி கொண்டு வந்து கொடுத்தார். இப்பவே கல்யாணத்துக்கு பூ வெச்சாச்சு போல இருக்கு எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.
அவள தாய்மாமனுக்குத்தான் கொடுக்கிறது என்று சின்ன வயசுல இருந்தே பேச்சு அந்தப் பகுதியில் தாய்மாமனுக்குத்தான் அதிகம் பேர் பொன்னைக்கட்டி கொடுப்பார்கள். அதனால அவளுக்கு நிச்சயதார்த்துக்கு பூ வைக்கும் போது கூட நிறைய பூ வாங்கி வந்தான் மாமன். இத்தனைக்கும் சீசன் இல்லாத போது, இவ்வளவு கூட விலை கொடுத்து ஏன் வாங்கினே என்று அவஅம்மா தம்பிட்ட சத்தம் போட்டா. பூங்கோதைக்கு பூவுன்னா ரொம்ப இஷ்டம்க்கா என்றான் தாய்மாமன்.
அவ தாய் மாமனுக்கு பொண்ணு கொடுப்பதில் அவங்க அப்பாவுக்கு அதிகம் இஷ்டம் இல்லை. குடிப்பான், குணம் சரியில்லைன்னு அவருக்கு இஷ்டம் இல்லைன்னு அவ அம்மாவிடம் சொல்லிப் பார்த்தார். அவனுக்கு என்ன குறைச்சல் மேஸ்திரி வேலை பாக்குறான் கட்டட வேலை நிறைய இருக்கு கை நிறைய சம்பாதிக்கிறான், அப்புறம் என்ன, தம்பிக்கு தான் கொடுக்கணும்னு அவ அம்மா ஒத்த கால்ல நின்னா. வேற வழி இல்லாம சம்மதம் கொடுத்தார்.
அப்புறம் என்ன, கோயில்ல கல்யாணம் வீட்ல சாப்பாடு அப்படின்னு யாரும் ஜாம் ஜாம் என்று கல்யாணம் நடந்துச்சு. சீக்கிரமா ரெண்டு பிள்ளை குட்டி ஆச்சு. ஆனால் பீடி, குடின்னு இருந்ததுனால பொசுக்குன்னு போய் சேர்ந்துட்டான்.
ஒத்த பொம்பள புள்ள அப்படின்னு செல்லமா வளர்த்த பூவோட நிலமையை பார்த்த அவளோட அப்பா அம்மா சீக்கிரம் போய் சேந்துட்டாங்க.
மாமனும் பெருசா பணம் காசு சேர்த்து வச்சிட்டு போகலை.அம்மா, அப்பாவும் பெருசா எதுவும் வைக்கலை. அதனால வேற வழி இல்ல புள்ள குட்டிய காப்பாத்தனும், வயத்த கழுவனும்னு நாலு வீட்டுக்கு வேலைக்கு போனா. மிச்ச நேரத்துல பூ கட்டி வியாபாரம் பண்ணி பொழப்ப நடத்தினா..
அவ்வளவு நல்ல வடிவானவள் தான். அழகானவள், துணை இல்லாமல் இருக்கான்னு ஆளாளுக்கு தூண்டி போட்டு பார்த்தாங்க. ஆனாலும் கவுரவமா வாழ்ந்தாள்.
அவளுக்கும் பூ வைக்க ஆசைதான். ஆனால் பூ வைக்கிறத சமுதாயமும், சம்பிரதாயமும் ஏத்துக்காது அந்த பூவை வித்தா வீட்டுசெலவுக்கு ஆச்சு அதனால பூ வைக்கிற ஆசையை தூரப்போட்டாள்.
விசேஷ நாட்கள் கோயில் பக்கத்துல பூ விற்பாள். மத்த நாட்களில் வீதிகளில் எடுத்துட்டு போய் வித்துட்டு வருவாள்.
ஒரு நாள் என்னவோ தெரியல, அன்னைக்குன்னு பூ அதிகமா விக்கல. கோயில் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாள். ஒரு பெரியவர் நிறையவே பூ கேட்டார். இவ எடுக்கும் போது, கூட வந்த அம்மா அவரோட கையை பிடித்து வேண்டாம்னு சொல்லிட்டு கூட்டிட்டு போயிட்டாள். போகும்போது புருஷன் கிட்ட விசேஷத்துக்கு பூ வாங்குறோம். தாலி அறுத்தவட்டயா வாங்கறது அப்படீன்னா.
இவளுக்கு சுறுக்குன்னு இருந்தது. கூனிக்குறுகிப்போனாள்.தூக்கம் வரவில்லை ராவெல்லாம் யோசிச்சு பார்த்தா.
அடுத்த நாள் மாலை ஒரு ஸ்டிக்கர் பொட்ட வச்சுட்டு. தலைக்கு கொஞ்சமா பூ வச்சுட்டு,கோவில் வாசலில்பூவிற்க உக்காந்தாள்.


























































