என்ன தேசம் இது.....
தண்ணீருக்கும், தங்களது உரிமைக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் அமைதியாக, சாலையோரத்திலோ, வீதியோரத்திலோ ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இருந்தால், ஊர்வலம் நடத்தினால், காவல்துறையும், நீதிமன்றமும் அனுமதி மறுக்கிறது.
ஆனால் அரசியல் கட்சிகள் சாலைகளை, பேருந்து நிலையங்களை மறித்து மணிக்கணக்கில் ஊர்வலங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், நடத்தினால் காவல்துறையும் கண்டு கொள்வதில்லை நீதித்துறையும் கண்டு கொள்வதில்லை.
ஆபத்துக் காலத்தில் நோயாளிகளை காப்பாற்ற அழைக்க, மருத்துவ மனையில் அனுமதிக்க பயன்படும் ஆம்புலன்ஸ் வண்டியை கூட அனுமதிக்க மறுத்து அடாவடித்தனமாய் முன்னாள் முதல்வரே பேசுகின்றார். ஏன் என்று கேட்க நாதி இல்லை. இதையம் நியாயப்படுத்த சில அறிவாளிகள் இருக்கிறார்கள்.
பொது அமைதி, நல்லிணக்கத்தை, குறைக்கின்ற, குலைக்கின்ற, கூட்டங்கள், மாநாடுகள், போராட்ட நிகழ்வுகள், மதவாதிகளோ, சாதி அமைப்புகளோ நடத்தும் போது காவல்துறையே முன் நின்று பாதுகாப்பு தருகிறது. நீதிமன்றம் சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கிறது.
மத நல்லிணக்கத்தை ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டங்களுக்கு, போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மீறி, தாறுமாறாக விபத்து ஏற்படுத்த முயலும் சாமியார், அதற்கு மத சாயம் பூசி கலகம் இழுத்தால் அவருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு அளிக்கிறது. நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. அரசு அமைதி காக்கிறது...
ஒன்றுமில்லாமல் தெருவில் திரிந்த அரசியல்வாதி பதவிக்கு வந்த பிறகு, அல்லது பதவியில் இல்லாமலேயே, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து அநியாயம் செய்யும்போது, அரசும், காவல் துறையும், அமலாக்கத்துறையும், நீதிமன்றங்களும், அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் எங்காவது அரசு ஊழியன் அஞ்சு பத்து லஞ்சம் வாங்கினால் அவனை கைது செய்து பிரமாதமாக ஊழலை ஒழிப்பதாக படம் காட்டுகிறார்கள்.
நீதித்துறை சீரழிந்து விட்டது, இன்னனார் ஊழல் செய்கிறார்கள் என்று பட்டியல் கொடுத்தால் முன்னாள் நீதிபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர் அடைகிறார்கள். நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் கிடைத்தால் அவரை பாதுகாப்பாக வேறொரு இடத்தில் பதவியில் அமர வைக்கிறார்கள்.
என்ன தேசம் இது...
No comments:
Post a Comment