சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 1 May 2026

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும்.

அதேபோல பல்வேறு தொலைக்காட்சிகளில் வரக்கூடிய நிகழ்வுகள், விவாதங்கள், தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள், சமூக ஊடகங்களில் வரக்கூடிய கருத்துக்கள், எல்லாவற்றையும் பார்க்கும்போது வழமையான தேர்தல், அரசியல் நடவடிக்கைகளை தாண்டி இத்தேர்தலில் கண்ணுக்குத் தெரியாத பல்வேறு மாற்றங்கள் நடந்திருக்கலாம். நடைபெற்றது அல்லது நடைபெறவில்லை என்று ஆணையிட இயலாதவாறு ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. தேர்தல் முடிவுகளை எண்ணிப் பார்த்த பிறகு தான் உண்மையான நிலவரம் தெரியும் ஆனால் அதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு மிகப்பெரிய பாடம் காத்திருக்கிறது. அதாவது எச்சரிக்கை என்று கூட சொல்லலாம். 

இதுவரை உலகம் கண்டு வழமையான அரசியல் முறை ஒரு அரசியல் கட்சி ,அதற்கென்று ஒரு கட்டமைப்பு, அதற்கென்று கொள்கையோ, திட்டமோ, பெரிதாகவோ, சிறிதாகவோ ஏதோ ஒன்று அதை வைத்து மக்களிடையே இயக்கங்கள், பிரச்சார பயணம் செய்து அதன் அடிப்படையில் தேர்தல்களை சந்தித்து தங்களை வளர்த்துக் கொள்கிறோம். அது வலதுசாரி சிந்தனை ஓட்டமோ அல்லது இடதுசாரி சிந்தனை ஓட்டமோ அல்லது மையப் போக்கோ ஏதேனும் ஒரு திசை வழியோடு செயல்பட்டதை தான் வரலாறு கண்டிருக்கிறது. 

ஆனால் அந்த மாதிரி எந்த விதமான திசையோட்டமும் இல்லாமல் ஒரு அமைப்பு ரீதியான செயல்பாடுகள், கொள்கைகள், இயக்கங்கள் ஏன் பிரச்சாரம் கூட எதுவுமே ஒழுங்காக செய்யாமல் ஒரு கட்சி 10 சதவீதம் 20 சதவீதம் ஏன் ஆட்சியை கூட கைப்பற்றும் என்றெல்லாம் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. எல்லாவற்றையும் விட ஊடக வெளிச்சங்கள், கூச்சல்கள் மிக அதிகமாக உள்ளன.

 அதை பெரிதாக நம்பக்கூடிய போக்கு கிட்டத்தட்ட எல்லார் மனதிலும் ஆழமாக பதிந்து விட்ட ஊடகங்கள் சமூக ஊடகங்கள் செய்திருக்க கூடிய தில்லு முல்லு பிரச்சாரங்கள்.

 ஒருவேளை அம்மாதிரியான தேர்தல் மாற்றங்கள், நிகழ்வுகள் மூலம் விஜய்யின் தவேக வாக்குகள் பெற்றால் அது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. 

அரசு, ஆளும் கட்சியின் அதிகார திமிர், எதிர் கட்சிகளின் செயலற்ற நிலை, சனநாயக செயல்முறைகள் மீதான அவநம்பிக்கை, ஊழல் போன்ற காரணங்களால் அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து விலகி செல்வாக்கிழந்து வருகின்றன. 

உலகம் முழுக்க கார்ப்பரேட்டுகள் சமூக ஊடகங்களின், ஊடகங்கள் மூலமாகவும் தாங்கள் விரும்பும் திசை வழியாக இளைஞர்களை கொண்டுசெல்ல ஜென் புரட்சிகளை நடத்தி அரசுகளின் நிலைத்தன்மையை அசைக்கின்றனர் அல்லது புதிய கட்சிகளை உருவாக்கி ஊடக விளம்பரம் மூலம் அரசுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். நேபாளத்தில் நடத்திய புரட்சி ஆட்சி மாற்றத்தில் முடிந்தது. 

இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் அரசு கவிழ்ந்து அவ்வாறே... நம் நாட்டில் கூட அன்னா ஹசாரே போன்ற திடீர் காந்திய வேடதாரிகள் மூலம் காங்கிரஸுக்கு முடிவு கட்டியதும், திடீரென உருவான ஆம் ஆத்மி மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தவழியும் அதே.... 

பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை, மாணவர்களை, அணிதிரட்டி அரசியல் படுத்தி பயிற்சி அளிக்காவிட்டால் சினிமாக்காரர்கள் பின்னாடியோ அல்லது பிற்போக்கு தீய சக்திகள் பின்னாடியும் அணிதிரள வாய்ப்பு உள்ளது. 

திராவிட இயக்கத்தார், இடதுசாரிகள் விழித்துக் கொண்டால் மகிழ்ச்சியே... 


 . 

பூவுலகு காப்போம்.


கடைசி மரம் வெட்டப்படும்போதும், கடைசி மீன் உண்ணப்படும்போதும், கடைசி ஓடை நஞ்சாக்கப்படும்போதும்,
பணத்தை உண்ண முடியாது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மனிதர்களின் முட்டாள்தனத்தை இந்தப் படத்தை விட சிறப்பாக விளக்க முடியாது

நீரின்றி அமையாது உலகு 
உயிர்களின்றி உனக்கேது பெருமை.. 
நீயின்றி நாங்களேது பிரபஞ்சத்தில்
எப்படியாகினும் பிழைத்துவிடு. 
இப்படிக்கு
கிரகங்கள்.. 
 

“ சாலையை விட்டு விலகி, ஒத்தையடிப்பாதையில் செல்... “ 

தயவுசெய்து மரங்களை நடுங்கள், நம்பிக்கையை நடுங்கள் 🌳❤🌳


என்ன நடக்கிறது இந்நாட்டில்?

 இந்த ஆண்டு மே தின கூட்டம் ஒன்றை பார்த்தேன். தமிழகத்தில் உள்ள இரு பொதுவுடமைக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு நூறு பேர் கொண்ட பேரணியை நடத்தி விட்டு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். தலைமை வகித்தவரில் இருந்து சிறப்பு பேச்சாளர் வரை சர்வதேச பிரச்சனை, இந்திய ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கை, மதவெறி கோட்பாடு, மக்களை பிரித்தாலும் சூழ்ச்சிகள், பொதுமக்களுடைய பொருளாதார கோரிக்கைகள் என ஆரம்பித்து உள்ளூர் பிரச்சனைகள் வரை பேசிக் கொண்டே இருந்தார்கள்.  சாலையில் செல்பவர்கள் இவர்களது கூட்டத்தை பொருட்படுத்தவே இல்லை. கூட்டத்தில் இருந்தவர்களும் பெரிதாக கவனித்த மாதிரியும் தெரியவில்லை .

இதை பார்த்த போது ஒரு வரலாற்று நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது இரண்டாம் உலகப் போருக்கு. முன்னால் ஜெர்மனி முதல் உலகப்போரில் தோற்ற அவமானங்கள், பொருளாதார பாதிப்புகள், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து அலுலாடிக்கொண்டிருந்தது. 

மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற பிரச்சனைகள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன. அங்கிருந்த பொதுவுடமை கட்சியினர் மக்களுடைய பிரச்சினைகளை பற்றி விலாவாரியாக பேசிக் கொண்டிருந்தார்கள். போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. 

ஆனால் மக்களுடைய வறுமையைப் பற்றியோ, வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, பொருளாதார கோரிக்கைகள் பற்றியோ பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், இழந்துவிட்ட ஜெர்மனியப் புகழ், ஆரிய இனத்தின் பெருமை ஆகியவற்றை தூண்டி விட்டுக்கொண்டு ஹிட்லரும் அவரது பரிவாரங்களும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். 

பேச்சு என்றால் சாதாரண பேச்சு அல்ல, மக்களை வெறி கொள்ளச் செய்யும் அளவுக்கு இனவெறிப் பேச்சு. மூலைச்சலவை செய்யும் பேச்சு. 

அப்போது ஆளும் கட்சியினை சேர்ந்த அமைச்சர்களில் ஒருவர் ஊழல் செய்தது பற்றி, அதுபற்றி அரசு நடத்தி வரும் விசாரணைகள் பற்றி பெரிதாக பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஹிட்லருடைய கட்சியை சேர்ந்த கோயபல்ஸ், புளுகுவதற்கு என்றே அவதாரம் எடுத்தவன் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தான். "இது மக்களுடைய காசு. இதை திருடியவன் அமைச்சர். இதை விசாரிப்பதற்கு ஒரு நீதிமன்றம், விசாரணை எல்லாம் அவசியமா? எங்களிடம் அதிகாரத்தை கொடுத்தால் நடுரோட்டில் ஊழல் செய்த மந்திரியை சுட்டுத் தள்ளிவிட்டு இதற்காகவும் தண்டச் செலவை மிச்சப்படுத்துவேன்!." என்று அளந்து விட்டு கொண்டிருந்தார். அவனை  அவன் சார்ந்த கட்சியை, அவனுடைய தலைவனான ஹிட்லரை, யதார்த்தத்திற்கு புறம்பாக வரும் பொய்யாக பேசும் அந்தக் கூட்டத்தை மக்கள் நம்பினார்கள். 

ஹிட்லருடைய கட்சியும் ஆட்சிக்கு வந்தது. தனது கட்சியினரை தற்குறிகளாக ஆக்கி, மக்களுடைய பிரச்சினைகள் எதையும் தீர்க்கவில்லை. மாறாக பிற நாடுகளுடன் சண்டை இழுத்து, யூதர்களை கொன்று குவித்து, பொதுவுடமை கட்சியினரை கொன்று குவித்து, இரண்டாம் உலக போருக்கு இழுத்துச் சென்று, உலகத்தையும் நாசமாக்கி தன்னாட்டையும் நாசமாக்கி நடுத்தெருவில் விட்டுவிட்டு செத்துப் போனார்கள்.

 இப்போது உள்ள கூத்துக்களும் ஞாபகத்துக்கு வந்தது. மக்களுடைய பொருளாதார கோரிக்கைகள், உலக மந்த நிலை, ஈரானை போருக்கு இழுத்து அமெரிக்கா செய்து வரும் அட்டூழியத்தால் உலகம் சந்திக்கும் பிரச்சனைகள், நம் நாட்டில் உள்ள மதவெறிப் போக்குகள், ஜாதிய பிரச்சனைகள் இது போன்ற ஏராளமான பிரச்சனைகள் பற்றி சமூக சிந்தனை உள்ளவர்கள் பொதுவுடமை கட்சியினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திராவிட இயக்கத்தினர் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு செய்து வரும் அநீதி, நிதி ஒதுக்கீடு செய்யும் பாரபட்சம், இந்தி திணிப்பு போன்ற விஷயங்களை பற்றி எல்லாம் நிறைய பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் உள்ளூர், தமிழக, தேசிய, சர்வதேசிய பிரச்சனைகள் பற்றி எதைப் பற்றியும் தெரியாமல் தற்குறித்தனமாக டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்கள். இந்த காசு மந்திரிக்கு போகிறது என்று எந்த விதமான பொது அறிவு இல்லாமல் நடிகர் விஜய் பாட்டு பாடி கூத்தடிக்கிறார். கூட்ட நெரிசலுக்குள் பேருந்தை நுழைத்து மேலும் நெருக்கடியை உண்டாக்கி 41 பேர் சாவுக்கு காரணமாக இருந்துவிட்டு குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஓடிப் போகிறார்கள். உலகில் எந்த பிரச்சினை நடந்தாலும், சமையல் எரிவாயு கிடைக்கவில்லை என்றாலும் திமுக தீய சக்தியே காரணம் என்று உளறி தள்ளுகிறார். ஒப்பாரி வைக்கிறார். 

இன்னொரு புறம் ஈழத் தமிழர் பிரச்சினை மட்டுமே வைத்துக் கொண்டு ஆமைக்கறி எருமை கறி என்று  சீமான் புளுகி கொண்டு மக்களை ஆடு, மாடு மேய்க்கச் சொல்லி பின்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சி செய்கிறார். 

ஆனால் கொடுமை பாருங்கள். படித்த இளைஞர்களிலிருந்து பல பேர் எந்த எதார்த்தமும் தெரியாமல். வரலாற்று அறிவு, அரசியல் அறிவு, பொது அறிவு எதுவுமே இல்லாமல் இவர்கள் பின்னாடி தற்குறிகளாக ஓடுகிறார்கள். 

உண்மையிலேயே நாம் எந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை.

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...