பாதங்களில் பொற்சிலம்பணிந்து அழகு நடைபுரிபவளே! வானில் மேற்கு திசையில் நிலவு கரைந்து போய்க் கொண்டிருக்கிறது . கீழ் திசையிலோ செஞ்சூரியன் கதிர்விரித்து கிளம்பி கொண்டிருக்கிறது . கருவானமானது கரைந்து வெளிச்சம் தோன்றி கொண்டிருக்கிறது . காக்கை கரைந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது . தெருவெல்லாம் ஈர்க்குமாறு கொண்டு பெண்கள் சுத்தம் செய்யும் ஓசை எழும்பி கொண்டிருக்கிறது . உழைத்து வாழ்பவர்கள், கடமையாற்றுபவர்கள், தூங்காமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் யாரும் இப்பொழுதில் உறங்குவதில்லையே. ஆரியர் இங்குள்ள மக்களுக்கு தீட்சை அளிக்கிறோம் என்ற மொழியில் குழப்பம் செய்து, நம் தமிழின் வளர்ச்சிக்கு தீங்குகளைத் விளைவித்து தம் மொழியினை வளர்ப்பது அறியாமல் உறங்குகிறாயே! இக்கொடுமையினை போக்கிட விரைந்து எழுந்து, போரிட புறப்படுவாய் என தமிழ் பாவையரை அழைக்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
*******************
காக்கை கரையும்! கருவானம் வெள்வாங்கும்!
மேற்கில் மதிகரையும்! கீழ்க்கதிரும் மேலெழும்பும்!
ஈர்க்குமா றோசை இரையும் தெருவெல்லாம்!
யாக்கை வளர்ப்பார் தவிரஎவர் இப்பொழுதில்
சேக்கை புரள்வார்? சிறுதுயிலுங் கொள்ளுதியே!
தீக்கை வடவர் திரிபுரையால் தீந்தமிழின்
ஆக்கந் தடுப்பார்; அவர்மொழிக்கே வித்திடுவார்!
போக்கைத் தடுக்கப் புறப்படுவாய் பொற்சிலம்பாய்!
தூக்கங் களைந்து துணிவேலோ ரெம்பாவாய்!27
🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment