சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 31 December 2025

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இது பகுத்தறிவின் காலக்கணக்கு... "நேரம் என்பது மாயை" என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அறிவியல்-தத்துவக் கருத்து, புத்தாண்டைப் பார்ப்பதில் ஒரு புதிய பரிணாமத்தைத் தருகிறது....

உண்மையில் இயற்பியல் விதிகள் படி

➤கடந்து போன "நேற்று" என்பதும், இன்னும் வராத "நாளை" என்பதும் இப்போது இல்லாத காலங்கள்.

➤நாம் வாழ்க்கையை "நாட்காட்டி" எனும் ஒரு கற்பனைக் கோட்டில் மட்டுமே அளவிடுகிறோம்.

➤அண்டம் உருவானதிலிருந்து ஒரே உண்மை "தற்போது" என்பதில் தான் உள்ளது.

மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் மிதக்கும் பூமி என்ற சிறு தூசி அளவுள்ள ஒரு கிரகத்தில், 350 கோடி ஆண்டு கால பரிணாம வளர்ச்சியால் உருவான ஒரு சிந்திக்கும் திறன் கொண்ட நவீன வகை உயிரினம் மட்டுமே... வேறு எந்த தனிப்பட்ட பெருமையும் நமக்கு இல்லை.. 

பூமியில் உதித்த பிற உயிரினங்களை தாண்டி, சிந்திக்க திறன் கொண்ட மனிதர்கள் கூட்டமாக வாழ ஆரம்பித்து, சமூகமாக மாறி பின் இனங்கள்,மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள், அரசுகள். பேரரசுகள் பல்வேறு நிலைகளை கண்டான். 

அவரவர் மொழிக்கும் இனத்துக்குமான கால வர்த்தமானங்களையும் கணக்குகளையும் கண்டான். பல்வேறு புத்தாண்டுகளையும் உருவாக்கிக் கொண்டான். தமிழ் புத்தாண்டு, தெலுங்கு புத்தாண்டு சீன புத்தாண்டு என பல புத்தாண்டுகளைக் கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் ஆங்கில புத்தாண்டின் வரலாறு கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். 

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு:

ஆரம்ப ரோமானியர்கள் மார்ச் 1-ஐ புத்தாண்டு தினமாகக் கொண்டாடினர். ரோமானியக் கடவுள் ஜனஸ் (ஜனஸ்) என்ற பெயரில் ஜனவரி மாதம் சேர்க்கப்பட்டது, மேலும் ஜனவரி மாதத்தின் தொடக்கமே புத்தாண்டாக மாறியது.ஜூலியஸ் சீசர் கி.மு. 45-ல் ஜூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தி, ஜனவரி 1-ஐ புத்தாண்டாக அறிவித்தார்.  

ஜூலியன் நாட்காட்டி வந்த பிறகு, ஐரோப்பாவின் சில பகுதிகளில் மார்ச் 25 அல்லது டிசம்பர் 25 போன்ற தேதிகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

1582-ல் கத்தோலிக்க திருச்சபையால் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது, இது ஜனவரி 1-ஐ மீண்டும் புத்தாண்டு தினமாக மீட்டெடுத்தது. 

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் படிப்படியாக கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டன. 1752-ல் இங்கிலாந்து, வேல்ஸ், அயர்லாந்து மற்றும் காலனிகள் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 1-ஐ புத்தாண்டு தினமாக ஏற்றுக்கொண்டது. ஆங்கிலேயரின் காலணி ஆதிக்கத்திற்குப் பிறகு அந்தக் காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளும் ஆங்கில புத்தாண்டினைக் கொண்டாட ஆரம்பித்தனர்

எது எப்படியோ தற்கால ஆங்கிலப் புத்தாண்டு  இன்று, கிரிகோரியன் நாட்காட்டியைப் பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது என்பது வரலாறு....... 

அது சரி, அது ஏன் ஆங்கில புத்தாண்டு என அறிவிக்கப்பட்டது என்று தெரியவில்லை.. 

ஆனாலும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் நாளாக மாறிவிட்டது. 

நள்ளிரவு பன்னிரண்டுமணி அடித்த நொடியில் இரைச்சல் போட்டு விடிய விடிய கூத்தடிக்கும் இளைஞரிலிருந்து, கோவில் கோவிலாக படையெடுக்கும் பெருசுகள் வரை, அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் படையெடுக்கும் அரசு ஊழியர்களிடம், அரசியல் தலைவர்களுக்கு மாலை அணிவித்து காக்கா பிடிக்கும் தொண்டர்கள் வரை என சாதி, மத பேதமின்றி எல்லோரும் கொண்டாடும் பொது பண்டிகை நாளாக ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. 

"புத்தாண்டு" என்றால் என்ன????அது தமிழ் புத்தாண்டு அல்லது ஆங்கில புத்தாண்டு என்று எதுவாக இருந்தாலும்.....

இது மனித மனத்தின் ஒரு அற்புதமான "மானசீகக் கட்டமைப்பு". கனவுகளைத் தூண்டும், மாற்றத்திற்கான உந்துதலைத் தரும், புத்துணர்வை ஏற்படுத்தும் ஒரு மனிதக் குறியீடு.... வரலாற்றுக்கு ஒரு அளவீடு.... அவ்வளவே.... 

நாம் வேண்டுவதெல்லாம் சமாதானமும், சமத்துவமும், சாதி மத பேதமில்லா அமைதியும், ஆனந்தமும், மனித நேயமும்நிறைந்த வாழ்க்கையே அந்த இனிய குறிக்கோள் நிறைவேறிட அனைவருக்கும் ஆனந்தமான ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...





1 comment:

  1. அருமை! வாழ்த்துகள் கார்த்தி;

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...