மான் விழிகளை போன்ற அழகான கண்களை உடையவளே! செந்தமிழ் கற்று பண்டிதரானோர் தாம் கற்ற மொழியை பணம் சேர்க்கும் பேச்சு வியாபாரி ஆயினர் பலர்.. அவரே அவ்வாறானால் மற்றவர் எவ்வாறிருப்பர்... மொழி அருமை உணர்ந்தவர் மொழிக்காக உரிமைக்குரல் எழுப்பினாலோ ஆள்பவர் அவரை அடக்கி அழிக்க முனைகிறார்.... மொழிக்காக போரிடுவது குற்றமென கூறி கொடுஞ்சிறைக்குள் அடைத்து குரலை நெறிக்கிறார்.
மொத்த தமிழினமும் ஊமையராய் மாறிடுமுன்னர், தாய்ப்பாலோடு தமிழ் பாலை ஊட்டிடும் பெண் குலத்தோரே இழந்திடும் உரிமைதனை காக்கவல்லார்.. பொற்கொடி போன்றவளே!!! இனியும் உறங்குதல் முறையோ? விழித்தெழுவாயே! என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார்.
*********************
கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
மற்றவரைக் கேட்பேன்! மான்விழியே! நாட்டுநலம்
உற்றசிலர் நின்றே உரிமைதரக் கேட்டாளோ
கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையுள் தள்ளுகின்றார்!
முற்றும் தமிழரினம் மூங்கையதாப் போகுமுனம்
பெற்ற குலத்தோரே பேருரிமை காக்கவல்லார்!
பொற்றொடியே துஞ்சல் புரையேலோ ரெம்பாவாய்! 14
No comments:
Post a Comment