சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 30 December 2025

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள் 22

 ஒரு மருந்தாளுனருக்கு மருந்தைப் பற்றி நினைப்பு வருவது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் உள்ள மருந்து என்ற அதிகாரமும், "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து" என்ற குறளும் தான். அந்த அதிகாரத்தில் பத்து பாடல்கள் இருந்தாலும் இந்தக் குறளை மட்டும் தான் அடிக்கடி கூறுவர். ஏனெனில் அதில் உள்ள மருந்துழைச்செல்வான் என்பவன் மருந்தாளுனர் என்ற கருத்தின் அடிப்படையில் தான்.

அக்குறள் பாடப்பட்ட காலத்தில் இருந்த மருந்துகள் எல்லாம் பச்சிலைகளும் பொடிகளும் தான். இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதம் என்ற பிரிவு உள்ளது. அதில் தைலம், கஷாயம் போன்ற வகைகள் வரும். இதே போல உலகம் எங்கும் அந்தந்த பகுதிகளில் ஏராளமான மருத்துவ முறைகளும் மருந்துகளும் உள்ளன. உலகெங்கும் பிரசித்திமானவை அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறை, ஹோமியோபதி என்று அழைக்கப்படும் ஜெர்மானிய மருத்துவமுறை, யுனானி என்று அழைக்கப்படும். அராபிய மருத்துவ முறை, மற்றும் சில. 

தற்பொழுது இங்கு புழக்கத்தில் உள்ள மருந்துகள் எல்லாம் அலோபதி எனும் மேற்கத்திய முறை மற்றும் அது உருவாக்கிய மருந்துகள், மருத்துவ முறைகள்... காலம் காலமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் ஒரு முறையான மருந்து மருந்தியல் துறை என்பது பதினெட்டாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் தான் உருவானது. 

மருந்தியல் என்பது மருந்துகளின் விளைவுகள், அவை எவ்வாறு அதன் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்கிறது. ஒரு மருந்து என்ன செய்கிறது மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறது மருந்தியல். 

1828 ஆம் ஆண்டு ஃபிரெட்ரிக் வோலர் கனிமப் பொருட்களிலிருந்து யூரியாவை ஒருங்கிணைத்து, உயிர் சக்தி கோட்பாட்டை தகர்த்தபோது செயற்கை கரிம வேதியியல் பிறந்தது. மருந்தியலின் பிறப்பு தேதி அவ்வளவு தெளிவாக இல்லை. 19 ஆம் நூற்றாண்டு முற்பகுதியில், உடலியல் வல்லுநர்கள் பல மருந்தியல் ஆய்வுகளை மேற்கொண்டனர்

1842 ஆம் ஆண்டில், கிலாட் பெர்னார்ட், அம்பு விஷம் கியூரே நரம்புத்தசை சந்திப்பில் தீவிரமாக நரம்பு தூண்டுதல்களால் தசையின் தூண்டுதலை குறுக்கிடுகிறது குறிப்பிட்டார்.

முதல் பல்கலைக்கழக இருக்கை நிறுவப்பட்டபோதுதான் மருந்தியல் ஒரு தனி அறிவியலாக உருவானதாகக் கருதப்படுகிறது. வால்டர் ஸ்னீடரின் கூற்றுப்படி, இது 1847 ஆம் ஆண்டு, ருடால்ஃப் புச்செய்ம் எஸ்டோனியாவில் உள்ள டோர்பட் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டபோது நடந்தது. 

நவீன மருந்தியல் நிறுவனர் என்று பொதுவாக அங்கீகரிக்கப்படுபவர் ஆஸ்வால்ட் ஷ்மிடெபெர்க் (1838–1921). ,. 

1866 ஆம் ஆண்டு இரத்தத்தில் குளோரோஃபார்மின் அளவீடு குறித்த ஆய்வறிக்கையுடன் தனது மருத்துவ முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவ்வாறு துவங்கிய மருந்தியல் இன்று உலக அளவில் மனித குல உடல் நலம் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு, முன்னேற்றத்திற்கு பெரிதளவுக்கு உதவி வருகிறது. 

இன்று, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி அல்லது மருந்தகக் கல்லூரியிலும் ஒரு மருந்தியல் துறை உள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஃபார்முலாக்கள் அந்தந்த நாட்டு பார்மகோபியாக்களாக(Pharmacopea ) பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தயாரிக்க உதவுகின்றன. உதாரணமாக BP, USP, IP என உலகெங்கும் உருவானது. 

ஆரம்ப காலத்தில் தாவரங்கள், கனிமப் பொருட்கள், விலங்கு சார்ந்த பொருட்கள், பின்னர் வேதிய பொருட்களை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 

நூறாண்டுகளுக்கு முன்பெல்லாம் மருந்தகங்களில் நம் முன்னோடி மருந்தாளுனர்கள் மாத்திரைகள், சாறுகள், சிரப்புகள், கசாயங்கள், பொடிகள் (Pilula, succus, Infusum, Oleum, Liquor, syrup, extractum, ungendum) போன்ற மருந்துகளை தயாரித்து வழங்கினார்கள்.

20-ஆம் நூற்றாண்டு: வேதியியல் முறைப்படி செயற்கை மருந்துகள் (Synthetic drugs ), தயாரிக்கப்பட்ட பின்னர் மருந்துத் துறை ஒரு பெரிய தொழிலாக உருவானது.

1930-களில்இயற்கைப் பொருட்களிலிருந்து செயலியில் உள்ள மூலக்கூறுகளை பிரித்தெடுத்து, அதன் செயற்கை வடிவங்களை உருவாக்கும் பணி தொடங்கியது. அதன் பின் ஏராளமான மருந்துகள் சேர்க்கை முறையில் தயாரிக்கப்பட்ட நடைமுறைக்கு வந்தன.

 நம் ஆரம்ப காலத்தில் மருத்துவமனைகளில் மருந்தாளுனர்கள் தயாரித்த கலவை மருந்து, பவுடர், களிம்புகள் எல்லாம் காணாமல் போய் நவீன மருந்துகள் ஏராளமாய் வந்துவிட்டன. 

கலவை மருந்துகளை தயாரித்து கொடுத்த கடைசி தலைமுறை நானாக தான் இருப்போம் என நினைக்கிறேன். ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட மருந்துகள் புழக்கத்தில் இருந்த நிலைமை மாறி, இன்றைக்கு அதி நவீனமான, புதிதாக அறிமுகமான மருந்துகள் கூட அரசு மருத்துவமனைகளில் , ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழங்கும் அளவிற்கு தமிழக மருத்துவத்துறை வெகுவாக முன்னேறி உள்ளது. அதற்கு ஏற்ப மருந்தாளுனர்களும் தங்களைத் தகவமைத்துக் கொண்டு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதுதான் மிகப்பெரிய பெருமை. அதற்கு காரணம், தமிழக அரசு உருவாக்கிய தமிழ்நாடு சேவை கழகம் மிக நவீனமான முறையில் அத்தியாவசியமான மருந்துகள், சிறப்பு மருத்துவ பிரிவு மருந்துகள் என வகைப்படுத்தி இலவசமாக இங்கு வழங்குவதும் முக்கிய காரணமாகும். 

அதே போல மருத்துவ துறையில் பட்டய படிப்பு, தாண்டி பட்டப்படிப்பு, பட்ட மேல் படிப்பு  B. Pharm, M. Pharm, Pharm D என நிறைய படித்தவர்கள் வந்துவிட்டனர். பட்டய படிப்பு மருந்தாளுநர்கள் அரசு பணியில் இருந்து கொண்டே பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் உருவானதும் ஒரு காரணம்.

 துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டாமலே போனது வருத்தமாக தான் உள்ளது.

 அதேபோல வளர்ந்து வரும் நவீனத்திற்கு ஏற்ப தொடர் மருத்துவக் கல்வி அனைத்து மருந்தாளுநர்களுக்கும் வழங்கப்பட வேண்டியது மிக அவசியம்.... 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...