சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 24 October 2025

தீபாவளி இல்லாத கிராமம்...

 ஒரு வழியாக தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடி முடித்து விட்டோம். .தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் காற்றின் தரக் குறியீடு, நேற்று சென்னையில் 400-ஐயும், கோவையில் 300-யும் காற்று மாசுபாடு குறியீடு வலையைத் தாண்டியுள்ளது.   நாட்டின் சில பகுதிகளில் தீபாவளி பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாடு 875 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.நம்மால் இயன்ற அளவுக்கு வெடி, வான வேடிக்கை, பட்டாசு, மத்தாப்பு என தூள் பரப்பி ஒரு வழியாக குப்பையாக்கி முடித்தாயிற்று.


 இயன்றவரை சுற்றுச்சூழலை மாசு படுத்தி நாசமாக்கி முடித்து விட்டோம் என்ற பெருமை, கிராமத்தில் தொடங்கி மாநகரம் வரை ஒட்டுமொத்த தமிழகத்தையே ஏன் இந்தியாவையே சாரும்.

 

இன்னொரு பக்கம் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இந்த கடைகளில், தினமும் சரியாக, 150 கோடி ரூபாய், வார விடுமுறை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில், அதை விட அதிகமாக, மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி வரை மூன்று நாட்களில் மட்டும், 789.85 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. 

 கடந்த ஆண்டு, தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய இரு நாட்களில் மது விற்பனை, 650 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 140 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளன.


 டாஸ்மார்க் சாதனைகள் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதல் விற்பனை என்று பெருமை பீத்திக் கொண்டிருக்கிறோம்.


 இது போன்ற ஆடம்பரங்களினாலும், வெட்டி பீத்தல் செலவுகளாலும் பொருளாதார செலவினங்களும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளும் அதிகமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது முடித்து விட்டோம்.

 நடுத்தர மக்கள் தங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை அழித்தும் ஏழை எளிய மக்கள் நிறைய கடனாளியாக்கி இருக்கிறோம்.


இத்தகைய கூத்துக்களுக்கு இடையில் இந்தியாவில் ஒரு கிராமம் மட்டும், அமைதியாக தீபாவளியை கடந்து சென்று இருப்பது வித்தியாசமாகவும் இருக்கிறது. இது இந்த ஆண்டு கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலைதான். இத்தனைக்கும் அந்த ஊர் முழுக்க இந்துக்கள் மட்டுமே வாழக்கூடிய கிராமம். இத்தனைக்கும் அந்த ஊரில் நாத்திகர்களோ, பொதுவுடமை கட்சியோ கிடையாது. . இது வேறு எங்கும் இல்லை... நம் தமிழகத்தில், சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர் தாலுகாவில், ஏரியூருக்கு அருகில் உள்ள எஸ் மாம்பட்டி, தும்பைப்பட்டி என்னும் கிராமம் தான்.


அதில் ஒரு மிகப்பெரிய பொருளாதார தத்துவமும் அடங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 71 ஆண்டுகளுக்கு முன்னால் ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த பெரிய அம்பலகாரரும், தும்பைபட்டி கிராமத்தின் பெரிய அம்பலகாரரும், மல்லாக்கோட்டை பெரிய அம்பலகாரரும்,தீபாவளி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ​​மக்கள் இது போன்ற திருவிழாக்களில் நிறைய செலவு செய்து கஷ்டப்படுகிறார்கள் என்ற பேச்சு வந்திருக்கிறது. சாமிக்கு சாமி கும்பிட அப்படி எல்லாம் செலவு கணக்கு பார்க்க முடியுமா என்று ஒருவர் கூற, அதற்காக கடன் பட்டு கடனாளியாகி கொண்டாட வேண்டுமா இன்னொருவர் கூறுகிறார். அதுவும் தீபாவளி வரும் நேரம் விவசாய வேலைகளை ஆரம்பித்து மும்முரமாகும் நேரம். கையில் இருக்கும் பணத்தை எல்லாம் விவசாயத்திற்கு செலவு செய்து விட்டு தீபாவளிக்கு கடன் வாங்குவது சரியா என்றெல்லாம் பேச்சு வந்தது. அப்போது ஒருவர் நமது திருவிழா என்பது பொங்கல் தானே. விவசாயிகளுக்கு அது தானே பெருவிழா. தீபாவளிக்கு இவ்வளவு செலவு செய்வதை விட்டுவிட்டு, நம் தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடலாமே என்று பேசியிருக்கிறார். அப்படியே செய்யலாம் என்று மற்றவர்கள் ஆமோதிக்க, அது சரி நாம் முடிவு எடுத்தால் போதுமா நம் மக்கள் ஒத்துக் கொள்வார்களா என்று யோசித்து இருக்கிறார்கள்.


அதற்காக மூன்று கிராம பொதுமக்களையும் அழைத்து பொதுவாக உள்ள காடு காவலன் கோவிலில் கூட்டம் நடத்தி விரிவாக பேசினார்கள். கடன் வாங்கி கஷ்டப்பட்டு நொந்து போனதால், மக்களும் சரி இனிமேல் நம் பகுதியில் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். 


நல்ல வேலையாக இது இந்துக்களின் பண்டிகையை நிறுத்துவது இந்து விரோதம் என்றெல்லாம் பேசுவதற்கு அப்போதைக்கு அங்கு ஆள் இல்லை போல் இருக்கிறது.


காடு காவலன் கோயிலில் சத்தியம் செய்த பிறகு எஸ். மாம்பட்டி, தும்பைபட்டி, ஒப்பிலான்பட்டி, சந்திர பட்டி, வலையபட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைபட்டி உள்ளுட்ட 13 ஊர் மக்கள் இன்றுவரை தீபாவளி கொண்டாடுவதில்லை. அதற்காக புத்தாடைகளனிவதோ, பலகாரங்கள் செய்வதோ, பட்டாசுகள் வெடிப்பதோ கிடையாது. அவர்கள் அந்த ஊரில் இருந்தாலும், வேறு எந்த ஊருக்கு சென்று வசித்தாலும் தீபாவளி கொண்டாடுவதில்லை. ஆனால் சபதம் செய்த மற்ற இரண்டு கிராமத்து மக்களால் கடைபிடிக்க முடியவில்லை. பெண்ணை கட்டிக் கொடுத்திருக்கிறோம், தலை தீபாவளி அது என்று சாக்கு போக்கு சொல்லிவிட்டு மீண்டும் தீபாவளி கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஆனால் தும்பை பட்டி மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்த சுற்று வட்டார கிராமங்கள் எதிலும் தீபாவளி இன்று வரை கிடையாது. 


அதேபோல கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அருகில் இருப்பதால் தீபாவளி நேரங்களில், அவர்கள் பட்டாசு வெடிப்பதோ மத்தாப்புகள் கொளுத்துவதோ கிடையாது..


எல்லா கிராமங்களும் தீபாவளியை விட வேண்டும் என்று சொல்லவில்லை.நல்ல துணிமணி எடுத்து கொள்வதையோ நல்ல பலகாரங்கள் ஆக்கி உண்பதையோ விட வேண்டும் என சொல்லவில்லை.. 


 ஆனால் காசை கரியாக்கி, காற்றை மாசாக்கி,  கைக்காசை செலவாக்கி கொண்டாடுவதை குறைத்து கொண்டாலே ஓரளவுக்கு குடும்பத்தையும் தேசத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்றலாமே. 


1 comment:

  1. செறிவு கூடுதலான மது இந்திய சமூகத்தில் குற்றங்களின் பின்னணியாக உள்ளது. அதே நேரம் வெளிநாடுகளில் கொண்டாட்டங்களின் பின்னணியில் இலகுவான து மதுரகம் உள்ளது. இதுவரை உலகில் முன்னேறிய நாடு மதுவிலக்கை நீட்டித்ததாக குறிப்புகள் இல்லை. மதுவிலக்கை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும். வெறும் எதிர்ப்பு பொருத்தப்படாது. மது குறித்து எதிர் உரையாடலை சமூகத்தில் அதிகம் இருக்கிறது. பூரண மதுவிலக்கு என்பது வேறொரு சீரழிவு கலாச்சாரத்தை அல்லது போதை மாஃபியாக்களை மட்டுமே உருவாக்கும்.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...