சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 31 October 2025

நினைவலைகள் 9

 நான் பணியேற்ற காலங்களில் பெரும்பாலான மருந்துகள் சாகா வரம் பெற்றவை... என்ன குழப்பமாக இருக்கிறதா?! அப்பொழுதெல்லாம் பெரும்பாலான மருந்துகளுக்கு காலாவதியாகும் தேதி எக்ஸ்பைரி டேட் போடப்படுவதில்லை.யுனிசெப் மூலம் வழங்கப்படும் மருந்துகளுக்கு மட்டுமே காலாவதி தேதி போடப்பட்டிருக்கும். 

பின்னர் பத்து ஆண்டுகள், அதன் பிறகு ஐந்து ஆண்டுகள், அதன் பிறகு 3 ஆண்டுகள் என்று குறுகிக்கொண்டே வந்தது. காலாவதி தேதி குறிப்பிடாமல் எந்த மருந்தும் தற்பொழுது வழங்கப்படுவதில்லை. அப்படியானால் இப்பொழுது மூன்று ஆண்டுகள் காலாவதி தேதி குறிக்கப்பட்டு இருக்கக்கூடிய மருந்துகள் அதன் முன்னர் 5 ஆண்டுகள் ஏன் பத்தாண்டுகள் வரை வழங்கப்பட்டது. அப்போது அவை விஷமாகிவிட்டனவா விஷத்தையா நாம் கொடுத்தோம் என்ற சந்தேகம் வருகிறதா? 

இல்லை காலம் போகப் போக மருந்தின் வீரிய தன்மை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வரும் காலாவதியான மறுநாளிலேயே மொத்தமும் வீரியம் இல்லாமல் போய்விடாது என்பதுதான் விஷயம். ஆனால் சில மருந்துகள் காலாவதிக்கு பின்னர் அதனுடைய தன்மை மாறி விஷத்தன்மையாக மாறுமா என யோசிக்க வேண்டும்.

காலாவதி என்பதன் பொருளென்னவென்றால் ஒரு மருந்து பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று உற்பத்தியாளரால் உத்தரவாதம் அளிக்கப்படும் தேதி இது.

மருந்தில் உள்ள செயலில் உள்ள பொருட்கள் காலப்போக்கில் உடைந்து போகக்கூடும், எனவே அதன் காலாவதி தேதியைக் கடந்த ஒரு மருந்து எதிர்பார்த்தபடி செயல்படாமல் போகலாம்.

காலாவதியான பிறகு, மருந்து பயன்படுத்த பாதுகாப்பானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, ஏனெனில் அதன் வேதியியல் கலவை மாறியிருக்கலாம். மருந்தின் வேதியியல் கலவை மாறக்கூடும், இது அதன் வீரியத்தைக் குறைக்கலாம் அல்லது ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 

எனவேதான் காலாவதியான எந்த மருந்தையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் நான் வேலைக்கு வந்த காலத்தில் இந்த அளவுக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு பெருமளவு இல்லாது இருந்தது ஆனால் இன்றைக்கு மருந்தாளுநர்களிலிருந்து பயனாளிகள் வரை விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.ஆனால் நான் முதலில் பணியில் சேர்ந்து உடனையே எனது மருத்துவ அலுவலர் மரு. கோபண்ணா அவர்கள் இந்த பதிவேட்டினைப் பற்றி விளக்கமாகச் சொல்லி தொடர்ச்சியாக ஆய்வு செய்வார்.  

 காலாவதியை கண்காணிக்க கூடிய பதிவேட்டை பராமரிக்கிற வேலையை மருந்தாளுனர்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறோம்இதன் பயனாக நம்முடைய நிலையங்களில் காலாவதி தேதிக்கு முன்னர் பயன்படுத்த இயலாத மருந்துகளை தேவைப்படும் நிலையங்களுக்கு மாற்றி விடுவோம். மற்றவர்களுக்காவது பயன்படும் அல்லவா.. 

. நான் பணிபுரிந்த இடங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் மற்ற மருந்தாளுநர்களை தொடர்பு கொண்டு பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கக்கூடிய மருந்துகளை பெற்று பயன்படுத்தினேன். அப்பொழுதெல்லாம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இருந்து எங்கெங்கு உபரியாக மருந்து இருக்கிறது என்று கடிதங்கள் அனுப்புவார்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி மருந்துகளை மாற்றிக் கொள்வோம்.

இதே வழக்கத்தில் நான் கடைசியாக மருந்து கிடங்கு அலுவலராக ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றிய போது, அம் மாவட்டத்திலிருந்த அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்தும் உபரி மருந்துகளை பெற்று மருத்துவமனையில் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 

அம்மாதிரி ஒரு முறை ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெறப்பட்ட மருந்துகளை எனது மையக்கிடங்கில் இருந்து மருந்தகத்திற்கு வழங்கிய போது, மருந்துகள் மூன்று மாதம் காலாவதி தேதி இருந்தது. அங்கு ஓடுகிற ஓட்டத்தில் ஒரே வாரத்தில் முடிந்துவிடும். அந்த மருந்தும் குறிப்பிட்டு தேதிக்கு முன்னதாகவே நோயாளிகள் பயன்படுத்தி விடுவார்கள். அதனால் யாருக்கும் கெடுதலும் இல்லை. நிலையத்தில் உள்ள மருந்து தட்டுப்பாட்டை குறைப்பதற்கு ஒரு சிறு துளி அளவு உதவி செய்யும் அவ்வளவுதான். 

என்னை பிடிக்காத ஒரு மருந்தாளுநர். நன்பர் இருந்தார் வேக வேகமாக இந்த மருந்துகளை தூக்கிக்கொண்டு முதல்வரிடம் போய் கெட்டுப் போன மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கச் சொல்லி மருந்து கிடங்கு அலுவலர் கட்டாயப்படுத்துகிறார் என்று புகார் சொன்னார். 

முதல்வர் என்னை கூப்பிட்டு அனுப்பினார். நான் விவரத்தை சொன்னேன். அப்புறம் அந்த மருந்தாளுநரிடம் கேட்டார். காலாவதி தேதி என்றால் என்ன தெரியுமா, அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றாவது தெரியுமா. உங்களுடைய மருந்தாளுனர்களுக்கு உதவி செய்யும் நோக்கிலும், மக்களுக்கு பயன்படட்டும் என்ற நோக்கிலும் தானே அவர் மருந்துகளை வாங்கி கொடுக்கிறார். ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறீர்கள். என்று திட்டி விட்டு என்னிடம் எழுத்து மூலமாக எழுதி தருமாறு கூறினார். 

இது ஒரு பெரிய விஷயம் இல்லை விட்டு விடுங்கள் மேடம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். 

நம்முடைய ஆட்கள் எவ்வளவு விவரமான, பெருந்தன்மையான ஆட்கள் என்பதை தெரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் அவ்வளவுதான்.. 

2 comments:

  1. அப்போது இருந்த மருந்துகள் சாதாரணமான கலவையில் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது புதிய மருந்துகள் பெரும்பாலும் சிக்கலான கலவையில் நிலையற்ற பொருட்கள் உள்ளதாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்த வேண்டியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. காலாவதி தேதிக்குள் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

      Delete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...