சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 29 October 2025

நினைவலைகள் 8

 ஒரு நாட்டின் மிகப்பெரிய செல்வம் என்பது மனித வளம் என்பது பொருளாதார அறிஞர்களின் கருத்து. ஆனால் அதே நேரம் மக்கள் தொகை பெருக்கம் என்பதும் ஆபத்தை விளைவிக்க கூடியது. அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவை வழங்குவதில் அதீத மக்கள் தொகை பெருக்கமும் அதீதமான நகர் மையமாதலும் ஏராளமான பின் விளைவுகளை தரக்கூடியது.

இந்தியா போன்ற நீண்ட கால காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகள் , பொருளாதாரக் கட்டமைப்பு சரியான முறையில் அமைக்கப்படாமலிருந்தன. மேலும் போதிய தொழில் வளர்ச்சி, நவீன விவசாய வளர்ச்சி இல்லாததாலும் சுதந்திரம் கிடைத்த போது வறுமையிலும் பொருளாதார நெருக்கடியிலும் நம்நாடு சிக்கி தவித்தது. 

அப்போது மக்கள் தொகை பெருக்கத்தால் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாத நிலையில் குடும்பக்கட்டுப்பாட்டு திட்டங்களை கடைபிடிப்பதில் அரசு முனைப்பாக இருந்தது. குறிப்பாக 70களில் குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் உச்சத்தை அடைந்திருந்தது.

 இரண்டுக்கு மேல் இப்போது வேண்டாம், மூன்றுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்ற கோஷம் அதிகமாக ஒலித்தது. 

பின்னர் அதுவே நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோஷத்தோடு களம் இறங்கியது. 

75-76 அவசர நிலை காலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் மிக மும்முரமாகவும் முனைப்பாகவும் நடைமுறைப்படுத்தியது. அதனால் ஏற்பட்ட அரசியல் சிக்கல்கள் அரசு மாற்றத்தில் போய் சேர்ந்தது. அதைப்பற்றி நாம் இதை இங்கு பேசப்போவதில்லை. 

ஆனால் திட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட போது அரசு ஊழியர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானார்கள். அதிலும் மருத்துவத் துறை, சுகாதார துறையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஊழியர்கள் விரட்டப்பட்டார்கள். இதில் மருந்தாளுனர்களும் தப்பவில்லை என்பதுதான் விஷயம். அதனால்தான் மருந்தாளுனர்களுக்கும் குடும்ப நல திட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நம்முடைய அனுபவங்களை இங்கு பேச விரும்புகிறேன். 

நான் வேலைக்கு சேர்ந்து 1978 இல் அவசரநிலை பிரகடனம் நீக்கப்பட்டு விட்டது, புதிய அரசாங்கங்கள் அமைந்துவிட்டன என்றாலும், கடுமையாக விரட்ட படாவிட்டாலும், குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள், திட்டங்கள் ஓரளவு வேகத்தோடு தான் நடந்து கொண்டிருந்தன. 

நான் வேலை பார்த்த திருவரங்குளம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி சராசரியாக 20 வேசக்டமி அறுவை சிகிச்சைகள் முகாம் காலங்களிலும், மற்ற நாட்களில் குறைந்த அளவிலாவது நடந்து கொண்டே தான் இருந்தன. 

அந்த நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களை, கிடங்குகளில் பெற்று, பராமரித்து, வழங்கி வந்து கொண்டிருந்தோம். அது போக இதர கருத்தடை சாதனங்களையும் பராமரிக்க வேண்டிய வேலை இருந்தது. 

அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும் மாவட்ட சுகாதார அலுவலர் மருந்தாளுனர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் குடும்ப நலத்திட்டத்திற்கு குறியீடு நிர்ணயம் செய்து அறுவை சிகிச்சைகள் செய்ய ஏற்பாடு செய்தார். அப்பொழுதெல்லாம் அதிகாரியினுடைய வாய்மொழி உத்தரவை எதிர்த்து பேசி செயல்பட முடியாது என்பதால் பேருக்கு ஒருவரை குடும்ப நிலை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். நான் மட்டுமல்ல, அந்த நேரத்தில் பணிபுரிந்த எல்லா மருந்தாளுநர்களுமே அறுவை சிகிச்சைக்கு ஆள் பிடிக்கத்தான் செய்தோம். அனைத்து பணியாளர்களும் செய்யும்போது நாம் மட்டுமென்ன விதிவிலக்கா என்ன.. 

இதுபோக புத்தாக்க பயிற்சி முகாம்கள் மகப்பேறு மையங்களிலும், பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வந்தன. பொதுமக்களிடையே பிரச்சாரத்தை கொண்டு செல்வதற்காக உள்ளூர் பிரமுகர்கள் மக்களை எல்லாம் அழைத்து வந்து சிறப்பு கூட்டங்கள் நடத்தி குடும்ப நலத்திட்டங்கள் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.

கூட்டங்களில் மருத்துவ அலுவலர், விரிவாக்க அலுவலர், ஆணையர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள். எனது மருத்துவ அலுவலர் மருத்துவர் கோபண்ணா அவர்கள் என்னையும் கூடவே அழைத்துச் செல்வார். அவர் போகிற இடங்களில் என்னையும் பேச வைப்பார். மைக் முன்னால் நின்று முதல் முதலாக பேசியது இது மாதிரி குடும்ப நல புத்தாக்க பயிற்சி முகாம்களில் தான். அவர் ஒலிபெருக்கி கூச்சத்தை நீக்கிடும் வண்ணம்,என்னை உற்சாகப்படுத்தி பேச வைத்தார். அதை ஒருநாளும் மறக்க இயலாது.

பிற்காலத்தில் வேறொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இது போன்ற புத்தாக்கபயிற்சி முகாமில் அங்கிருந்த விரிவாக்க அலுவலர் நோட்டீஸில் எனது பெயரை போட்டு விட்டு என்னையும் பேச ஏற்பாடு செய்தார். மாவட்ட குடும்ப நல அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சார அதிகாரி மருந்தாளுனரை எல்லாம் எதற்கு பேச வைக்கிறீர்கள் என்று அவரை கடிந்து இருக்கிறார்.இவர் கடுப்பாகி போய், ஏன் சார் எழுதப் படிக்கத் தெரியாத ஊராட்சி மன்ற தலைவரை எல்லாம் கூப்பிட்டு பேச வைக்கிறீர்கள், நன்றாக மக்களிடையே பழகி இயல்பாக பேசக்கூடிய சாரை பேச வைத்தால் என்ன குறைந்து விடப் போகிறது என்று கடுப்படித்து விட்டார்.

எனக்கு தகவல் தெரிந்ததும் சங்கடப்பட்டு போனேன். அதிலிருந்து எந்த அரசு கூட்டங்களிலும் பேசுவதே இல்லை.. 


 இருந்தாலும் பின்னாளில் நான் எம் ஏ, எம் பில் ஆகிய படிப்புகளை மக்கள் தொகையியல் பற்றி தான் படித்தேன். அது வேறு விஷயம்... 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...