சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 27 October 2025

தேவரம்மா அத்தை..

 மிக நீண்ட நாள் கழித்து எங்கள் உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது மதுரையிலே தேவரம்மா அத்தை எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவர்கள் இறந்து சில காலம் ஆயிற்று என்றார்கள். தொடர்பு அதிகம் இல்லாததால் தெரிவிக்க இயலவில்லை என்றார்கள். மிகவும் வருத்தமாக இருந்தது.  

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். நாம் பொதுவாக ஆசிரியரை தான் எழுத்தறிவித்தவன் என்று சொல்கிறோம். படிப்பதற்கு ஆர்வமூட்டி வழிகாட்டுபவர்களை நம் மாதிரி எதுவும் சொல்வதில்லை.

சிறுவயதில் படிக்கின்ற காலத்தில் பாடத்தை தாண்டி கதை, இலக்கியம் அறிவியல் என்று மற்ற புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை பொதுவாக யாரும் ஊக்குவிப்பதில்லை.

ஆனால் அதிர்ஷ்டவசமாக மிகச்சிறிய வயதிலேயே வாசிக்கும் பழக்கம் எங்களுக்கு ஏற்பட எங்கள் சுற்றுப்புறம் அமைந்தது. அப்போது எல்லாம் மதுரையில் நிறைய வாசகசாலைகள் இருக்கும் அதில் தினசரி, வாரந்திர பத்திரிகைகள் போடப்பட்டிருக்கும். எங்கள் வீட்டு வாசலில் சிவாஜி ரசிகர் மன்றம் இருந்தது. அதில் பேசும் படம் அம்புலி மாமா போன்ற புத்தகங்கள் போடுவார்கள். அதைவிட எனக்கு சிறப்பாக அமைந்தது நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில் இருந்த தேவரம்மா அத்தை வீடு தான்.

அப்பொழுதெல்லாம் ஒரு காம்பவுண்ட்டிற்குள் ஏழு, எட்டு குடித்தனங்கள் குடியிருப்பார்கள். நாங்கள் குடியிருந்த பசுபதிஅத்தை வீட்டில், வீட்டு சொந்தக்காரரான பசுபதி அத்தை வீட்டைத் தவிர இந்த நான்கு குடித்தனங்கள் இருந்தன.

அதில் ஒன்றுதான் தேவரம்மா அத்தை குடி இருந்தது. பொதுவாக காம்பவுண்டு வீட்டில் பல்வேறு ஜாதியினர் இருப்பார்கள். யாரும் என்ன ஜாதி என்று யாரையும் கேட்டுக் கொண்டதில்லை. எல்லோரையும் உறவு முறை வைத்துதான் அழைப்பது தான் வழக்கம். அவர்களின் உறவினர்களையும் இதே மாதிரி முறை வைத்து சித்தப்பா பெரியப்பா மாமா என்று அழைப்பது தான் வழக்கம் அதில் நாங்கள் பெரும்பாலும் அந்த வீட்டில் தான் கெதியாய் கிடப்போம் அதற்கு பல காரணங்கள் உண்டு. ஏனென்றால் அப்போதைக்கு ரேடியோ வைத்திருந்த ஒரே வீடு அவர்கள் வீடு மட்டுமே. எங்கள் தெருவிலேயே இரண்டு மூன்று வீடுகளில் மட்டும் தான் ரேடியோ இருந்தது. ஒலிச்சித்திரம் கேட்கவும், பாடல்கள் கேட்கவும் அங்குதான் கதியாய் கிடப்போம். அதுபோக கல்கி குமுதம் போன்ற வார பத்திரிகைகள் அவர்கள் தான் வாங்குவார்கள். ஏழெட்டு வயது இருக்கும் போதே புத்தகம் புரட்ட ஆரம்பித்தது அவர்கள் வீட்டில் தான்.

ஆரம்பத்தில் புரட்டி படம் பார்க்க ஆரம்பித்தது, பிறகு அம்புலி மாமா, வாண்டு மாமா சித்திரக் கதைகள், 007 பாலு, சிலையைத்தேடி,மூன்று மந்திரவாதிகள்..... என பட்டியல் நீண்டது ..

 தீபாவளி வந்துவிட்டால் கல்கி தீபாவளி மலர், விகடன் தீபாவளி மலர் வாங்குவார்கள். அதில் உள்ள படங்களை பார்ப்பதற்கு, கதைகளை படிப்பதற்கும் சண்டை போட்டுக் கொள்வோம்.. 

அதன் பிறகு எழுத்துக்கூட்டி பொன்னியின் செல்வன் என ஏராளமாய் கதைகள் படித்தது அவர்கள் வீட்டில் தான். அதன் பிறகு அவர்கள் ஏராளமாய் வந்த கதைகளை எல்லாம் பைண்டிங் செய்து வைத்திருப்பார்கள் அவற்றையும் எடுத்து படிப்போம் பொதுவாக குழந்தைகள் புத்தகங்கள் எடுப்பதை உரிமையாளர்கள் விரும்ப மாட்டார்கள் கிழித்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும். ஆனால் அத்தை ஒருபோதும் எங்களை தடுத்ததில்லை. எங்கள் மீது பிரியம் அதிகம் காரணம் அவர்களுக்கு குழந்தை இல்லை.

மாமாவின் மூத்த மனைவி கைக்குழந்தை இருக்கையில் இறந்து விட்டதால் அத்தையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். 

அந்த பையனின் பெயர் அழகிய மணவாளன் என்ற செல்வம். எனக்கு அப்பா வைத்த பெயர் செல்வம். தாத்தா நட்சத்திரம் பார்த்து வைத்த பெயர் கார்த்திகேயன். ஆகவே மாமாவோ, அத்தையோ அல்லது யாராவது செல்வம் என்று கூப்பிட்டால் இரண்டு பேரும் ஓடுவோம். அதனால் அவரை பெரிய செல்வம் என்றும், என்னை சின்ன செல்வம் என்றும் அழைத்தார்கள்.

அத்தையின் கணவர் மாமா சுந்தர ராமானுஜம் சொந்தமாக மருந்து கடை வைத்திருந்தவர். பிற்காலத்தில் இயலாமல் மதுரை பாண்டியன் சூப்பர் மார்க்கெட் மருந்தாளுனர், மருந்து கடை பிரிவு மேலாளர் பொறுப்பு வகித்தவர். துரதிஷ்டவசமாக மற்றவர்கள் செய்த தவறுகள், திருட்டு காரணமாக நிர்வாக பொறுப்பு ஏற்ற இவருக்கு நிறைய தொகை தண்டமாக கட்ட வேண்டி இருந்தது.

ஒரு கட்டத்தில் கட்டவேண்டிய தொகைக்காக நீதிமன்ற ஜப்தி நடவடிக்கை மேற்கொண்ட போது வீட்டில் அமீனா புகுந்து தையல் மெஷின், ரேடியோ, மற்றும் சில பொருட்களையும் கைப்பற்றி சென்றனர். 

ஆமை வீடு புகுந்தம் அமீனா வீடு புகுந்தும் உருப்படாது என்று சொல்வார்கள். எல்லோரும் துயரப்பட்டோம். சில நாட்களில் அவர்களது ஒரே பையன் செல்வம் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். 

செல்வம் என்ற பெயரை அழைத்தாலே அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள் என்பதால் எல்லோரும் என்னை செல்வம் என்று அழைப்பதை விடுத்து கார்த்தி அழைக்க ஆரம்பித்தார்கள். அந்த செல்வத்தோடு செல்வம் என்ற எனது பெயரும் செத்துப் போனது... 

மிகவும் செல்வக்காக இருந்த மாமாவும் சூப்பர் மார்க்கெட் வேலையை விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்றார். சில வருடங்களில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.. 

பிறந்து வீட்டில் மிகவும் செல்வக்காக வளர்ந்த தேவரம்மா அத்தை, வீட்டில் புகுந்த கணவரும் பையனும் இறந்த பிறகு, அவர்களது சகோதரி வீட்டில் அடைக்கலமானார். அவர் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். பிற்காலத்தில் சத்துணவு மையத்தில் சமையலராக வேலை பார்க்க வேண்டிய கொடுமை நேரிட்டது. 


அவர்கள் வீட்டில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பின்னாளில் ஒரு துண்டு காகிதம் கிடைத்தாலும் அதை படிக்கின்ற பழக்கம் அங்கிருந்துதான் வந்தது. அதேபோல இன்று என் வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன என்றால், அதற்கு தூண்டுகோல் அத்தை சேர்த்து வைத்த புத்தக குவியல் தான் காரணம். எப்போது சந்தித்தாலும் ஏதாவது படித்த கதையைப் பற்றியோ புத்தகங்கள் பற்றியோ பேசுவோம். அந்த அளவுக்கு நல்ல வாசிப்பு பழக்கம் உள்ளவர்.

அவருக்காகவே செத்துப்போன எனது செல்வம் என்ற பெயரை பின்னாளில் அரசு பணியில் இருக்கும் போது எழுதுவதற்கு வசதியாக புனைபெயராக புதுகை செல்வா என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். எனது பிளாக் கூட "புதுகை செல்வா" என்ற பெயரில் வந்ததற்கு காரணம் அதுதான். 

2 comments:

  1. உருக்கமான பதிவு தோழர்

    ReplyDelete
  2. நெகிழ்ச்சியான மகிழ்ச்சி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...