சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 28 October 2025

மறக்க முடியாத தோழர்கள் 3


 பெரிய அளவுக்கு அடுக்குமொழி சொற்களோ, அலங்கார வார்த்தைகளோ, இலக்கியப் புனைவுகளோ, இலக்கிய மேற்கோள்களோ இல்லாமலேயே, எளிமையான வார்த்தைகள், அன்றாட வாழ்வில் புழங்கும் சொற்றொடர்கள், சுலபமாக புரிந்து கொள்ளும் உவமைகள், இவைகளால் மொத்த கூட்டத்தையும் கட்டியாளும் எளிய பேச்சாளர் சமூக சிந்தனையாளர் தோழர் நன்மாறன் ஆவார்.

முதன்முதலாக நான் அவரை சந்தித்தது ஒரு மதுரை மஹால் அருகில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில்தான். எளிய உருவமும், மக்களை கவரும், எளிய ஆனால் மனதைக்கவ்வும் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு, அவர் மேடையை விட்டு இறங்கியதும் நானும் எனது நண்பர்கள் அப்துல்ராஜா மற்றும் தாமரைச்செல்வனும் அவரை சந்தித்து கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தோம்.

கைகுலுக்கிய மூவரும் சிறுவர்களானாலும் புன்னகையோடு எங்களை வரவேற்று அன்புடன் பேசினார். சிறிது நேரத்தில் எங்கள் முகவரிக்குத் தெரிந்து கொண்டு நேரில் வந்து சந்திக்கிறேன் என்று வழியனுப்பி வைத்தார் . சிறுவர்கள் என்று அலட்சியம் காட்டாமல் மறுநாளே எங்களைத் தேடி இஸ்மாயில் புரத்தில் வசித்து வந்த எனது நண்பன் அப்துல் ரசாக் வீட்டிற்கு தனது தோழர்களோடு வந்து சேர்ந்தார்.

வழக்கம்போல நானும் தாமரைச்செல்வனும் ராஜாக் வீட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். உங்களைத் தேடி ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னவுடன் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. வெளிய வந்து பார்த்தால் தோழர் நன்மாறன், ஈசிஏஅனந்தன், ஜீவானந்தம், ரகுமத் ஆகியோர் நின்று கொண்டிருந்தார்கள். 

பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து பொதுவான விஷயங்களை பேச ஆரம்பித்தோம். சமூகப் பிரச்சனைகள், ஏற்றத்தாழ்வுகள் பற்றி பேசவந்தது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்ற சமூக கொடுமைகள் ஒழிய சோசியலிசம் தான் சரியான பாதை என்பதை எங்களுக்கு விளக்கினார் . அதிலிருந்து தொடர்ந்து எங்கள் நட்பு. தேடித் தேடி இளைஞர்களை சந்தித்து அவர்களோடு பேசி அவர்களை ஒரு சமூக மாற்றத்திற்கு செய்யும் உன்னதமான பணியை தொடர் நன்மாறன் கொண்டிருந்தார். 

அதன் பின்னால் அவர்களோடு இணைந்து சோசியலிஸ்ட் வாலிபர் முன்னணி என்ற அமைப்பில் நானும் எனது நண்பர்களும் பணியாற்ற ஆரம்பித்தோம். கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன். நிறைய கூட்டங்கள், நிகழ்ச்சிகள், போராட்டங்களில் பங்கேற்றோம். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் பார்த்தவுடன் புன்னகைத்து எங்களை அழைத்து பேசுவார்.

பின்னாளில் அரசு பணி கிடைத்து மதுரையை விட்டு புதுக்கோட்டை சென்ற பிறகு அவரோடு இருந்த தொடர்பை விட்டு போயிற்று. இருந்தாலும் ஆங்காங்கே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவரை சந்தித்து பேசுவேன். பழைய நிகழ்வுகள் நண்பர்களை பற்றி எல்லாம் பேசிக் கொள்வோம். 

வெகு காலம் கழித்து மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் நான் பதவி உயர்வு பெற்றபோது அவர் அங்கு நோயாளியாக சிகிச்சை பெற வந்திருந்தார். 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் முதல்வர் அவர்களை சந்திக்க வந்திருந்தார். நான் எனது துறை தலைவர் என்ற முறையில் முதல்வரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, ​​முதல்வர் தோழர் நன்மாறனை அறிமுகப்படுத்தினார் வேண்டியிருந்தது உதவிகள் செய்து கொடுங்கள், அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் மிக எளிமையானவர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். 

இருவருமே பரஸ்பரம் வெளியில் காட்டிக் கொடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே வணக்கம் தெரிவித்துக் கொண்டோம். உண்மையில் அவர் மருத்துவ உதவிகள் கேட்பதற்கு கூட மிகவும் கூச்சப்பட்டார். 

தனியாக சந்தித்து பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம். அப்போது மேற்கு வங்காளத்தில் பொதுவுடைமைக் கட்சி படுதோல்வி அடைந்தது. பொதுவாக தேர்தலில் பின்னடைவுகளை சந்தித்து இருந்த நேரம். இந்த பின்னடைவுக்கு என்ன காரணம் என்று அவரிடம் விசாரித்தேன். 

அவர் பதிலுக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றெல்லாம் பொறுமையாக விசாரித்தார். 

நான் சொன்னேன் மீன் தண்ணீருக்குள் இருக்கும் வரை தான் அதற்கு உயிர் இருக்கும். வெளியில் எடுத்து விட்டால் அது கருவாடு தான். பொதுவுடைமைக் கட்சி மக்களோடு இருக்கும் வரை தான் அவர்கள் ஜீவனோடு இருக்க முடியும். அதிகாரம் கிடைத்து மக்களை விலகிச் சென்றால் கஷ்டம் தான் என்றேன்.

 ஏனெனில் அரசின் தன்மை அவ்வாறு.. அரசு எந்திரம் என்பது நிலையாக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி இருக்க கூடிய சக்தி தானே. ஆட்சி பொறுப்பிற்கு யார் வந்தாலும், அரசில் பணியாற்றக்கூடிய ஊழியர்களும், அரசின் கொள்கையும், செயல்பாட்டு அமைப்பும் மாறாமல் ஆதிக்கத்தோடு அவ்வாறு வந்தால் மக்களை விட்டு விலகி தானே செல்ல நேரிடும். நேற்று வரை வெள்ளைக்காரனிடம் பணியாளர்களாக இருந்தவர்கள் தானே, சுதந்திர இந்தியாவிலும் பணியாளர்கள். அவர்கள் தான் இன்றும் பணியாளர்கள் அவர்களின் செயல்பாட்டில் மாற்றம் வராமல் எப்படி மக்களுக்கு சேவை செய்ய இயலும் தோழர் ஏ கே ஜி சொன்ன மாதிரி ஒருவன் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினராகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ செயல்பட ஆரம்பித்து விட்டால் கெட்டுச்சீரழியாமல் மீண்டும் வருவது என்பது எளிதான காரியம் அல்ல ஆனால் ஏனெனில் அதிகார போதை ஆடம்பரங்கள் அவ்வாறு சீரழிக்க வாய்ப்புகள் நிறைய உண்டு என்று ஒரு முறை எழுதி இருந்ததாக நினைவு. 

சிறிய அளவில் தொழிற்சங்கங்களிலோ, அல்லது வெகுஜன இயக்கங்களிலோ பொறுப்புக்கு வந்த உடனே ஆணவம் தலைக்கேறி தான் சொல்கிறபடி தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்கிற எண்ணம் வரும்போது, ​​ஆட்சி பொறுப்பே கைக்கு வரும் போது அதிகார போதையும் ஆணவமும் தலைக்கேறுவது இயற்கை தானே, மக்களை விட்டு வெகு தொலைவில் சென்று விட்டதனால் தான் தோல்வி அடைந்திருப்பார்கள் என்று எனது கருத்தை கூறினேன். 

அவரும் சிரித்துக் கொண்டே இருக்கலாம் இன்று மக்களிடம் கூடுதலாக சென்றடைய வேண்டும் என்கிற படிப்பினை தான் என்று கூறிவிட்டு மீண்டும் பேசுவோம் என்று கூறினார். துரதிர்ஷ்டவசமாக அதன் பிறகு சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை.. 

மக்களையும், நாட்டையும் மிகவும் நேசித்த மிகவும் எளிமையான அருமையான, மறக்கமுடியாத தோழர் அவர். 


இன்று அவருடைய நினைவு நாள்.


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...