குற்றம் களைதல்..
தமிழ் கூறும் நல் உலகம் மாபெரும் இலக்கிய சுரங்கமாக இருந்தது என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட ஏராளமான நூல்களே சாட்சி.
அவ்வாறு இயற்றப்பட்ட நூல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கூட இலக்கணம் படைத்தது நற்றமிழ்.
ஒரு சிறந்த நூல் அல்லது பேச்சு, என்பது கீழ் கண்ட குற்றங்கள் நீங்கியிருத்தல் மிக முக்கியமானது என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது
கூறியது கூறல், குன்றக்கூறல், மிகைபடக் கூறல், பொருளில கூறல், மயங்கக்கூறல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல், மாறுகொளக் கூறல், பழித்த மொழியான் இழுக்கம் கூறல், தன்னான் ஒரு பொருள் கருதித் தழுவுதல், பிறன் பொருளைத் தழுவுதல்
ஆகிய குற்றங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
குன்றக்கூறல்: ஒரு பொருளை விளக்குவதற்குத் தேவையான அளவு சொற்கள் இல்லாமல், குறைவாகக் கூறுதல் (குறைத்துக் கூறுதல்).
மிகைப்படக் கூறல்: தேவையான அளவை விட அதிகமாக, தேவையற்ற மிகைப்படுத்தலுடன் கூறுதல்.
பொருள் இல கூறல்: தர்க்கம் அல்லது உண்மைக்கு மாறான, பயனற்ற அல்லது பொருளற்ற கருத்துகளைக் கூறுதல்.
மயங்கக்கூறல்: கருத்துக்கள் ஒன்றோடு ஒன்று கலந்து, தெளிவற்ற நிலையில், கேட்பவருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கூறுதல்.
கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்: கேட்பவரின் காதுகளுக்கு அல்லது மனதிற்கு இன்பம் தராமல், கேட்பதற்கு இழிவாக அல்லது கடுமையாக அமைதல்.
மாறுகொளக் கூறல் என்பது முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது அல்லது எழுதுவதாகும். அதாவது, ஒரு கருத்தை முதலில் கூறிவிட்டு, பிறகு அதற்கு மாறான கருத்தைக் கூறுவது (முரண்படக் கூறுதல்)
பழித்த மொழியான் இழுக்கம் கூறல்:இது வசைச்சொற்களைப் பயன்படுத்தி, அல்லது இழிவான சொற்களால் ஒரு நூலில் உள்ள தவறுகள் (இழுக்கம்/வழு) எடுத்துரைப்பது.
தன்னான் ஒரு பொருள் கருதித் தழுவுதல்
இவை பேச்சு மற்றும் எழுத்தில் தவிர்க்கப்பட வேண்டிய குற்றங்களாக தமிழ் இலக்கண நூல்கள் வலியுறுத்துகின்றன.
ஒரு சிறந்த நூல் என்பது தேவையான அளவிலான வார்த்தைகளைக் குறைத்து கூறாமலும், மிகைப்படுத்தாமலும், பொருளற்ற விடயங்களைக் கூறாமலும், தெளிவற்ற குழப்பத்தை உண்டாக்காமலும், இருத்தல் அவசியம் என தொல்காப்பியம் கூறுகிறது, மேலும் கேட்பவர் இனிமை கொள்ளத்தக்க வகையிலிருத்தல் அவசியம். பிறரை பழித்திடும் வண்ணம் இருத்தல் கூடாது. முன்னுக்குப் பின் முரணாகவோ தான் எழுதியதையே மறுத்திடும் வண்ணமோ எழுதுதல் கூடாது.
வசைச்சொல்லை பயன்படுத்திடும், பிறர் கருத்தினை திருடும் வண்ணமோ இருத்திட கூடாது. சலிப்பு தட்டிய வண்ணம் திரும்ப திரும்ப கூறக்கூடாது என்று நூல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
இது பேச்சுக்கலைக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தும். ஏனெனில் பேச்சுக்கலையும் எழுத்துக்கலையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது.
நம் காலத்து அரசியல்வாதிகள், இலக்கியவாதிகளின் பேச்சு மேற்கூறிய எந்த வரம்புக்குள்ளும் வருவதில்லை என்பது நம் போதாத காலம் தான்..
No comments:
Post a Comment