சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 30 March 2026

தேர்தல் திருவிழா 5

 பொதுவாகவே தேர்தல் என்று வந்துவிட்டால் நிறைய பேருக்கு ஜுரம் வரும். டீக்கடைகள் ஆரம்பித்து தொலைக்காட்சிகள் வரை விவாதங்களுக்கு பஞ்சம் இருப்பதில்லை. 

அவரவர் சிந்தனைக்கு ஏற்ப, இருக்கும் அல்லது விரும்பும் கட்சிக்கு ஏற்ப கருத்து கூறுவது இயற்கை தான். ஆனால் அதை தாண்டி நடுநிலைமையோடு ஆய்வு செய்து தேர்தல்களைப் பற்றி விவாதிப்பதற்கு பெரும்பாலும் யாரும் தயாராக இருப்பதில்லை. 

இந்தியாவில் சுதந்திரம் வருவதற்கு முன்னால், குடியரசு என்று அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட்டவை என இரு கூறாக கூறலாம். 

முதற்கூறு அதிகம் பாதிக்குமளவிற்கு பெரிதாக நடந்து விடவில்லை. காரணம் அந்த தேர்தல்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குட்பட்ட அரசு தான் விரும்பும் போக்கில் நடத்திய தேர்தல். அவ்வளவு தான்.

 பட்டதாரிகள், நிலச்சுவான்தார்கள், வரிகட்டியவர்கள் என குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பங்கேற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாதி பேர், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு மூலம் நியமனம் செய்யப்பட்டவர்கள் பாதிப்பேர் கொண்ட, அதிகாரம் இல்லாதவர்கள்  மூலமாக நடத்தப்பட்ட அரசுகள். 

எனவே அனைத்து மக்களும் பங்கேற்ற தேர்தலில், அனைத்து மக்களுக்குமான அரசோ இல்லை. 

1947க்கு பிறகு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடி உருவாக்கிய அரசியல் சட்டம் 1950ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு குடியரசு என அறிவிக்கப்பட்டது. 

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் வயது வந்த அனைவரும் வாக்களித்து தேர்வு நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்படையில்   மத்திய அரசு எனவும் மாநில அரசு எனவும் உருவாக்கப்பட்ட அரசுகளுக்கு தேர்தல்கள் நடைபெற்றது. நடைபெற்று வருகிறது.... 

சரி தேர்தல்களைப் பற்றி ஒரு முறையான ஆய்வுகளை பார்ப்போம். பொதுவாக அளிக்கப்படும் வாக்குகளை இருவிதமாக பார்க்கலாம். ஒன்று நேர்மறை வாக்குகள். மற்றொன்று எதிர்மறை வாக்குகள். 

நேர்மறை வாக்குகள் எனப்படுவது ஒரு கட்சியினுடைய கொள்கை, செயல் திட்டம் ஆகியவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கையில் அளிக்கப்படும் வாக்கு நேர்மறை வாக்குகள் ஆகும்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது சுதந்திரப் போரில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி மக்களுக்கு நல்லது செய்யும், வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும், அதை செய்யக்கூடிய தலைவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை நிறைய மக்களுக்கு இருந்தது. அந்த அடிப்படையில் போடப்பட்ட வாக்குகள் நேர்மறை வாக்குகள். 

அதேபோல பொதுவுடமை தத்துவம் தான் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும் அதை நடைமுறைப்படுத்தக் கூடிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நன்மை பயக்கும் என்று பொதுவுடைமை கட்சிகளுக்கு ஒரு சாரார் வாக்களித்தனர். இதுவும் நேர்மறை வாக்குகளே...

அதேபோல திராவிட இயக்க கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்ட மக்கள், திராவிட இயக்கத்தார் ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு நல்லது கிடைக்கும் என்ற நேர்மறை எண்ணங்களோடு ஆதரவளித்தனர். 

திரைப்படத் துறையில் திராவிட கொள்கைகளையும், சமூக சீர்திருத்தங்களையும்  பொதுவுடைமை கருத்துக்களையும் பரப்பி வந்த திரு எம் ஜி ராமச்சந்திரன் தனியாக கட்சி தொடங்கும் போது அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில்  அவருக்கு வாக்களித்தது நேர்மறை வாக்குகளே. 

அதேபோல திரு என்டிஆர், திரு விஜயகாந்த் போன்ற திரைப்பட நட்சத்திரங்கள் நம்பிக்கைகளை விதைத்ததால் அவர்களுக்கு அந்த நம்பிக்கையின் அடிப்படையில் போடப்பட்ட வாக்குகள் நேர்மறை வாக்குகளே!!! 

புதிதாக ஒரு கட்சியை துவக்கி, கொள்கை, திட்டம் அறிவித்து யாரும் செயல்படும்போது, முதலில் விழும் வாக்குகள் நேர்மறை வாக்குகளே.... 

இனி எதிர்மறை வாக்குகளை பார்ப்போம்... 


1 comment:

  1. சிந்திக்க பயப்படுபவன் கோழை,சிந்திக்க தெரியாதவன் மிருகம். சிந்திக்க தெரிந்தவன் தான் மனிதன்…..

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...