சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 26 November 2025

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள் 16

 என்னுடைய அரசு பணியில் நான்காண்டுகள் புது டெல்லி திகார் சிறையில் முகாமிட்டிருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை எட்டாம் அணியின் மருந்தகத்தில் மருந்தாளுனராக பணிபுரிந்தேன்.


நிறைய பேருக்கு சந்தேகம்... டெல்லி சிறைச்சாலையில் இவர்களுக்கு என்ன வேலை?! அப்படி எல்லாம் கூட இருக்குமா என்று!!!. 

திகார் சிறைச்சாலை மட்டுமல்ல, அதற்கு வெகு காலத்திற்கு முன்னரே இருந்து, தமிழகத்தின் காவல் படையில் ஒரு அணி பட்டாலியன் வெளிமாநில பணியாக எல்லை பாதுகாப்பு பணி, மற்றும் தேசிய பாதுகாப்பு பணியில் நீண்ட வருடங்களாக பணியாற்றுவது நிறைய பேருக்கு தெரியாது.

60ல் சீன போருக்கு முன்னரே இருந்து மலபார் போலீஸ் என்று அழைக்கப்படும் தமிழக ரிசர்வ் படையின் ஓரணி படைப்பிரிவு, வடகிழக்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது. சீனப் போருக்கு பின்னால் தான் எல்லை பாதுகாப்பு படை என்ற ஒரு தனிப்பிரிவு துவக்கப்பட்ட பிறகு அந்த அணி புது டெல்லிக்கு மாற்றப்பட்டது.

அவ்வாறு அனுப்பப்பட்ட, முன்னாளில் மலபார் போலீஸ் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு புதுடில்லியில் துணை ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம், அந்நிய தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தனது காவல் பணியை செய்து வந்தது. கிங்ஸ் வே கேம்ப் எனப்படக்கூடிய இடத்தில் முகாமிட்டிருந்த அந்த அணியானது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, ​​அனைவரையும் மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட அரசு திட்டமிட்டதாகவும், இப்படைப்பிரிவின் பணியை மிகச் சிறப்பாக உணர்ந்த கிரண்பேடி அவர்கள் திகார் சிறைச்சாலை பொறுப்பில் இருந்ததால் தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணியை திகார் சிறைச்சாலையில் பணிபுரிய ஏற்பாடு செய்ததாகவும் சொல்லுவார்கள்.

அது சரி, இதில் மருந்தாளுனர்களுக்கு என்ன வேலை என நினைக்கிறீர்களா?!.

வடகிழக்கு எல்லைப் பகுதி ஏஜென்சி - NEFA என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக காவல் படை அணி ஒரு மருத்துவப் பிரிவு இணைக்கப்பட்டது. இம்மருத்துவ பிரிவில் ஒரு மருத்துவர், இரு மருந்தாளுநர்கள், இரு ஆண் செவிலி உதவியாளர்கள் இணைக்கப்பட்டிருந்தனர். இம்மருத்துவக் குழு இந்த படைப்பிரிவு அணியோடு முகாமிட்டிருக்கும் இடத்தில் அவர்களுடன் தங்கி, இணைந்து பணியாற்றும்.

இப்படை பிரிவில் உள்ள காவலர்கள் மற்றும் அவர்களது அதிகாரிகளுக்கு மருத்துவ உதவி செய்வதுதான் இம்மருத்துவக் குழுவின் பணியாகும் உடனடி முதலுதவி மருத்துவ பரிசோதனை வைத்தியம் செய்வது தேவைப்பட்டால் மேல் மருத்துவத்திற்கு அழைத்துச் சென்று உதவி செய்வது இக்குழுவின் வேலை.

எனது நண்பரும், மிக மூத்த மருந்தாளுனருமான சுப்பையா அண்ணாச்சி, புதுக்கோட்டையில் மூத்த மருந்தாளுநர் ரகுபதி ஆகியோர் அந்த காலத்தில் நேபாவில் பணியாற்றியவர்கள் தான். ரகுபதி அவர்கள் பட்டாளத்தில் வேலை பார்த்தவர் என்று அடிக்கடி சொல்லுவார்கள் அது இந்த பணி தான் என்று அப்போது எனக்கு தெரியாது.

இந்த பட்டாளம் எங்கெல்லாம் மாற்றலாகி முகாமிடுகிறதோ அவர்களுடைய இந்த மருத்துவ அணியும் செல்லும்.வழக்கமான மருந்தக பணிகளுடன்  காவலர்களுக்கு ஊசி போடுவதிலிருந்து, கட்டு போடுவது, முதலுதவி செய்தல் போன்ற எல்லா வேலைகளையும் மருந்தாளுனர் செய்ய வேண்டும்.ராணுவத்திலும் மருந்தாளுனரின் பணி அது தான். 

அவ்வாறு இந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு எட்டாம் அணி திகார் சிறைச்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அதனுடன் இணைக்கப்பட்டது மருத்துவ அணியில் நான்கு ஆண்டுகள் நானும் பணிபுரியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

திரு பாலசுப்ரமணியம் என்ற மூத்த மருந்தாளுநர், திரு தங்கப்பன் பிள்ளை திரு சிவமணி ஆகிய ஆண் செவிலிய உதவியாளர்களோடும், குலா நந்தா சர்மா என்ற உதவியாளர் கொண்ட மருத்துவ அணியோடு நான் பணிபுரியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

மரு. கிரிஜா அம்மையார் எங்கள் மருத்துவ அலுவலராக பணிபுரிந்தார். அவரது கணவர் சி ஆர் பி எஃபில் துணை இயக்குனராக பணிபுரிந்ததால் அவர்கள் வெளியில் இருந்து தினசரி வந்து செல்வார். மற்றபடி எங்கள் அணி திகார் சிறைச்சாலையில் காவலர் குடியிருப்பு பகுதியில் தங்கி பணிபுரிந்தோம். 

காவலர்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் பணிபுரிகிறார்கள் என்பதை அவர்களோடு வாழ்ந்த போதுதான் என்னால் உணர முடிந்தது. எவ்வளவு கொடூரமான தட்பவெட்ப நிலையில் அவர்கள் 24 மணி நேரமும் இடைவிடாது பணி புரியக்கூடிய சூழலை நேரடியாக அனுபவிக்க முடிந்தது. 

டெல்லியில் வெயில் காலம் மிகவும் கொடுமையான வெயிலாக, வெப்பமாக இருக்கும். குளிர் காலமோ நேர் எதிரிடையாக சில சமயங்களில் மைனஸ் 4 டிகிரி அளவுக்கு கூட கொடூரமான குளிராக இருக்கும். இதில்  சிறைச்சாலை சுற்று பகுதி, காவல் கோபுரங்களில் நின்று பணியாற்றுவது என்பது மிகவும் கடுமையான ஒன்று. குளிர்காலத்தில் லேசான காற்று கூட நிலை குலைய செய்து விடும். 

இதில் தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம், மோசமான குணம் கொண்ட கைதிகள் போன்ற கடினங்களையும் சந்தித்துக் கொண்டுதான் காவலர்கள் அங்கு பணிபுரிந்து வந்தனர். 

அவர்களுடைய கடினமான வாழ்க்கையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. 

அங்கு பணிபுரிந்த 1100 காவலர்களின் கிட்டத்தட்ட பெரும்பாலான காவலர்களின் பெயர்கள் எனக்கு மனப்பாடமாக இருந்தது. ஆளை பார்த்தவுடனே பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு பணிபுரிந்தேன். அதுதான் எனக்கும் அவர்களுக்குமான நட்பை, நெருக்கத்தை உருவாக்கியது. 

அங்கிருந்து மாற்றலாகி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு கூட, எத்தனையோ வருடங்கள் கழித்து கூட என்னை பார்த்த உடனே வந்து என்னுடைய பெயரை சொல்லி ஐயா நலமாக இருக்கிறீர்களா என்று என்னிடம் பேசும் அளவிற்கு அந்த நெருக்கம் இருந்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. 

அங்கு பணிபுரிந்த காலத்தில் அனைவருக்கும் ஆன மருத்துவ பரிசோதனை முகாம் ஒன்று ஒருமாத காலமாக நடைபெற்றது. அனைவருக்கும் இசிஜி எடுத்து, ரத்த அழுத்தம், நாடி துடிப்பு பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை என அனைத்தையும் செய்து ஒரு பதிவேடு தயார் செய்துதேவைப்படுபவருக்கு மேல் பரிசோதனைக்கு டி டி யு ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்வது அல்லது சிறப்பு மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்வது போன்ற வேலைகளை நாங்கள் செய்ய வேண்டி வந்தது. 

அதனால் மேல் அதிகாரிகளில் இருந்து கீழ்நிலை காவலர்கள் வரை எல்லோரும் எங்கள் மீது மிகவும் அன்பாக இருந்தார்கள். இப்படி எல்லா வேலைகளும் முடிந்ததற்கு முதன் முதலில் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் வேலை செய்யும் போது ஊசி போடுவது, கட்டு கட்டுவது, தையல் போடுவது, பிபி பார்ப்பது என்று எல்லா வேலைகளையும் செய்து பழகியதால், திகார் சிறைச்சாலையில் இந்த வேலை செய்வது எனக்கு சிரமமாக  தெரியவில்லை. 

அங்கு பணியாற்றிய போது கிடைத்த மிக நல்ல அனுபவங்களோடு, நான் வேலை பார்த்த காலத்தில் அங்கு பணிபுரிந்த காவலர்கள் மற்றும் பணியாளர்கள் எட்டு பேர் குளிர் மற்றும் வெப்பம் போன்ற தாக்குதல்களால் மரணம் அடைந்தது தான் மிகவும் துயரமான அனுபவம். 

அதேபோல காவலர்கள் யாருக்கேனும் உடல்நிலை மோசமானால் அருகில் உள்ள டி டி யு ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம் அங்கு நோயாளியினுடையது பிரச்சனைகளை ஆங்கிலத்தில் எடுத்து விவரிப்போம். அங்குள்ள மருத்துவர்கள் ஆங்கிலம் தெரிந்தால் கூட இந்தியில் மட்டுமே கேள்வி கேட்பார்கள். அப்படி ஒரு இந்தி வெறி அவர்களுக்கண்டு. 

தனிப்பட்ட முறையில் ஒரு மருந்தாளுனராக பல்வேறு இடங்களில் பணி புரிந்த எனக்கு காவல்துறையிலும் பணியாற்றிய அந்த நான்காண்டு காலம் வாழ்நாளில் மறக்க முடியாது முடியாத அனுபவம் தான். 

1 comment:

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...