வருடா வருடம் மழை வருதலும், வறட்சி வருதலும் அதன் தொடர்ச்சியாக மக்கள் சந்திக்கும் அவதிகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் தொடர் நிகழ்வுகளாக உள்ளது . அது குறித்து என்றாவது முறையாக நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோமா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறியே மிஞ்சும்.
ஒவ்வொரு ஆண்டும் சாதாரண மழை பெய்தால் கூட ஆங்காங்கே தண்ணீர் வடியாமல் நிற்பது, சாலைகள் அரித்து செல்லப்படுவது, வீடுகள் நீரால் சூழப்படுவது, வீட்டிற்குள் தண்ணீர் புகுவது, சாலைகளில் தண்ணீர் நிற்பது , சேதமடைவது, போக்குவரத்து பாதிக்கப்படுவது, விபத்துக்குள்ளாவது, வேலைக்குச் செல்ல முடியாமல் திண்டாடுவது, உணவுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு, ஆள் சேதம், பொருள் சேதம், என அன்றாடங்காய்ச்சியில் இருந்து நடுத்தர வசதி வாழ் மக்கள் வரை அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதனால் மக்கள் படும் அவதி கொஞ்சநஞ்சம் அல்ல. ஆனால் இவ்வாறு நிகழ்வுகள் நடைபெறும் போது மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைப்பது என்னமோ தொலைக்காட்சிகள் தான்.
முன்பெல்லாம் மழை வெள்ளம் வந்தால், அரசுக்கு கிடைத்திருக்கக் கூடிய தகவல்களின் அடிப்படையில் தண்டோரா போட்டு மக்களை எச்சரிப்பார்கள். வருவாய் துறை அலுவலர்கள், ஊரகத் துறை, தீயணைப்பு, காவல்துறை ஊழியர்கள் வெள்ள அபாய காலங்களில் களத்தில் நின்று பணியாற்றுவார்கள்.
அரசியல் தலைவர்கள், மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தொண்டர்கள் என அனைத்து பிரிவினரும் பார்வையிட்டு , நிவாரணப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு வானொலி, தொலைக்காட்சிகள் மூலமாக இதுகுறித்த எச்சரிக்கைகளும் செய்திகளும் வர ஆரம்பித்தன.
அப்பொழுது எல்லாம் ரமணன் என்ற பெயர் மட்டும் தான் மழை வந்தாலே அடிபடும். ஆனால் தற்பொழுது தொலைக்காட்சிகளில் ஆளாளுக்கு நம் கலாச்சாரத்திற்கு பொருத்தமே இல்லாமல் கோட், சூட், கவுன் அணிந்து கொண்டு ஆண், பெண் வானிலை நிபுணர்கள்?! என்ற பெயரில், பெரிய வரைபடங்களோடு மக்களை பீதியில ஆழ்த்துகிற மாதிரி செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நேரலை ஒளிபரப்பு என்ற பெயரில் கேமராமேன் சகிதமாக நிருபர்கள் களத்தில் இறங்கி வெள்ளம் சேதம், பொதுமக்கள் துயரம் என காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் துயரங்களை காட்டி எச்சரிக்கை செய்வது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது என்றால் தவறு இல்லை. ஆனால் அதிகமாக பீதியை கிளப்பிக்கொண்டு லேசான சேதத்தையும் மிக பயங்கரமாக காட்டிக் கொண்டு சில மணிநேரத்தில், அல்லது சில நிமிடங்களில் உலகமே அழிந்து விடுவதைப் போன்ற பிரமையை உண்டாக்குவது எந்த வகையில் நியாயம்.
முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் இதற்கு முன் எல்லாமே நன்றாக இருந்தது போலவும் இப்போதுதான் நாசமாய் போனது போல கதை விடுவதும், நேற்று எல்லாமே மோசமாய் இருந்தது, இன்றைக்கு எல்லாம் சரி பண்ணி சேதமே இல்லை என்பது போல புருடா விடுவது இன்னாள் ஆளுங்கட்சிக்காரர்களின் செயலாக உள்ளது.
இதில் விவாதம் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு ஒரு ஜால்ரா, எதிர்க்கட்சிக்கு சண்டையிடுவதற்கு ஒரு ஆள், நடுநிலைமையாளர் என்ற போர்வையில் மிக வேண்டிய பக்கம் கதை விடும் ஆசாமிகள் கூப்பாடு போடுவதும், உண்மையில் அனுபவம் மிகுந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒரு பக்கம் போராடுவதும் நடக்கின்ற கூத்துக்கள் காண சகிக்க இயலாததாக உள்ளது.
தொழில்நுட்ப அறிஞர்கள் கூறுகிற மாதிரி புவி அமைப்பானது விழுகின்ற ஒவ்வொரு துளி நீருக்கும் கணக்கு வைத்து வடிந்து சென்று, வடிகால், ஓடைகள்,குளம், ஏரி, கண்மாய், சிற்றாறு, ஆறு,கடலிலே கலக்கிற மாதிரி இருந்தது.
மனித குல வளர்ச்சியில் குடியிருப்புகள், நகரங்கள், மாநகரங்கள் உருவாகும் காலத்திலே தங்கள் வசதிக்கு தகுந்த மாதிரி நீர் செல்கின்ற பாதை எல்லாம் ஆக்கிரமித்து, நீர் தேங்குகிற இடங்களை காணாமல் ஆக்கி மாற்றி அமைத்ததால் பெருகிவரும் நீரானது சேதத்தை விளைவிக்கிறது.
இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல், ஆளாளுக்கு பொதுமக்களிடம் இருந்து, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என மொத்த கட்டமைப்புமே பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு, மழை வெள்ள காலத்தில் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது.
விவசாயத் தொழில் நஷ்டமாகி போனதால் விவசாயிகள் விளை நிலங்களை விற்றுவிட்டு பிழைப்பு தேடி சென்று விடுகிறார்கள். விளை நிலங்கள் எல்லாம் குடியிருப்பு மனைப்பகுதிகளாக மாறிப் போய் நீர் செல்லும் பாதைகள் எல்லாம் அடைக்கப்பட்டு வழி மாறி போகின்றது.
சென்னை போன்ற பகுதிகளின் மண்ணின் மைந்தர்கள், வழியில்லாமல் கரை பகுதிகளில் குடிசை போட்டு வாழ்ந்த காலம் போய், தீ விபத்துகளில் குடிசைகள் எரிந்தும் வெள்ளத்தால் குடிசைகள் போயும் வெளியேறி, அல்லது வெளியேற்றப்பட்டு விட்டனர்.
மனை பட்டாக்களோடு சேர்த்து புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்டுகின்றன. நீர் படுகையிலே அரசே குடியிருப்பு மனைகளாக மாற்றியதால் குளங்களும் ஏரிகளும் காணாமல் போய், குடியிருப்பு பகுதிகளால் மாறிவிட்டன. திடீர் கல்வி தந்தைகள் கல்லூரி வளாகங்கள் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளை, ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்து கட்டியதன் விளைவாகவும் , அரசே அரசு அலுவலகங்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டியதன் விளைவாகவும், வெள்ள நீர் செல்வதற்கு வழி இன்றி சென்னை பெருநகரம் போன்ற பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கடாய் மாறும் நிகழ்ச்சிகளை ஆண்டாண்டு காலமாய் கண்டு வருகிறோம்.
இவற்றைத் தடுக்க வேண்டிய பொதுத்துறை பொதுப்பணித்துறை அலுவலகங்களும் நீதிமன்றங்களும் கூட குளங்களை ஏரிகளையும் அழித்து கட்டப்படுவதைக் காண்கிறோம்.
முன்பெல்லாம் மழை வந்தாலே வீட்டிற்கு ஒருவர் மண்வெட்டி எடுத்து ஏரிகள் குளங்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து பாதைகளை மண்வெட்டி போட்டு ஊர் பொது வேலையாகவே செய்ததை கண்டிருக்கிறோம். ஆனால் இப்போது அதற்கென திட்டங்கள் வகுத்து அரசே நடைமுறைப்படுத்தினாலும் 100 நாள் வேலை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் பணியாற்றுபவர்கள், திட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் கடனுக்கு அந்த வேலையை செய்து தீர்க்கிறார்கள்.
எல்லா திட்டங்களிலும் ஒதுக்கப்படக்கூடிய நிதி முழுமையாக செலவழிக்கப்பட்டது, நேர்மையுடனும் அந்தரங்க சுத்தியுடனும், சமூக நலனுடனும் செயல்படுத்தப்பட்டிருந்தால் இம்மாதிரி வடிகால் திட்டங்கள் தோல்வியில் முடிந்திருக்க முடியுமா என்ன.
மேலும் மக்காத பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை உபயோகித்து விட்டு நீர் செல்லும் பாதைகளில் கொட்டி விடுவதனால் அவை அடைப்புகளை ஏற்படுத்துகின்றன. மழை நீர் பூமிக்குள் செல்லாதவாறு தடுக்கின்றன.
இதில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை, நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், நீர் செல்கின்ற பாதையை அடைத்தவர்கள், ஏரி குளங்களை தூர்த்தவர்கள், வடிகால்களை அமைக்க ஒதுக்கப்பட்ட செலவு பணத்தை ஏப்பமிட்டவர்கள் என பொதுமக்கள், அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள், இதை தடுக்க தவறிய அல்லது வெளிப்படுத்த தவறிய ஊடகங்கள், நீதித்துறை என ஒட்டுமொத்த சமூகமே இதற்கு பொறுப்பாவார்கள். இதையெல்லாம் உணர்ந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளப் போகிறோமா என்ன. குறை சொல்வதற்கு யாரையாவது தேடிக் கொண்டிருப்போம் அல்லது அடுத்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அதைப்பற்றி பேசிக் கொண்டிருப்போம் அவ்வளவுதான்...
No comments:
Post a Comment