சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 27 November 2025

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

 பொதுவாகவே பெண்கள் தனியாகவோ, கூட்டம் கூட்டமாகவோ, குடும்பத்திலோ அல்லது வெளியிலோ வன்முறைக்கு ஆளாவது என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

குடும்பத்தில் குடும்ப வன்முறை என்ற பெயரிலோ, அல்லது தனிப்பட்ட முறையிலோ, உள்நாட்டு போர் அல்லது போர், கலகங்கள், என பெண்கள் வன்முறைக்கு ஆளாவது காலம் காலமாகவே நடைபெற்று வருகிறது.

 மனைவி அழகாக இல்லை, வரதட்சனை கொடுக்கவில்லை, நடத்தையில் சந்தேகம் என்ற பெயரில் ஏதோ ஒரு வகையில், கல்லூரியில் படிக்கும் பெண் அல்லது தனியாக இருந்த பெண், பயணம் செய்த பெண் வன்முறைக்கு ஆளானாள் என்ற மாதிரி செய்திகளை அன்றாடம் கேட்டு வருகிறோம். 


புராணக் கதைகளில் தொடங்கி, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் என எங்கு பார்த்தாலும், எல்லா காலத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை மனிதகுலம் கண்டு கொண்டே இருக்கிறது. 

மகாபாரதத்தில் கணவன்மார்கள் பாண்டவர்கள் சூதாடி தோற்றதாலே, கௌரவர்கள் பாஞ்சாலியின் தலைமுடியை இழுத்து ஆடையை களைந்து அவமானப்படுத்தியதாகட்டும், சகோதரி சூர்ப்பனகை மானபங்கப்படுத்தப்பட்டதால் ராம, லட்சுமனரை பழிவாங்க சீதையை ராவணன் தலைமுடியை தூக்கிச் சென்றதாக, டிராய் நகரத்திலே ஹெலன் என்ற பேரழகியை எதிரிகள் தூக்கிச் சென்றது போன்ற புராணப் புனைவுகளைப் பார்த்திருக்கிறோம். 

செங்கிஸ்கான்கள் படை எடுப்பு மாதிரி ஏராளமான படையெடுப்புகளிலிருந்தும், உள்நாட்டு போர்களிலும், எதிரிகளைக் கொன்று பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டு சென்றதான கதைகளை நிறைய கேட்டிருக்கிறோம். 2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், 'உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நம் நாட்டில் கூட மணிப்பூரில் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது பெண்களின் நிர்வாணமாக இழுத்துச் சென்ற காட்சிகளை புகைப்படங்கள் செய்தித்தாள்கள் வழியாக கண்டிருக்கிறோம். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் என்ற பெயரில் வாச்சத்தி கிராமத்தில் 18 பெண்களை வனத்துறையினரும் அரசு ஊழியர்களும் இழுத்துச் சென்று காட்டிலே வன்புணர்வு செய்ததை எதிர்த்து நடைபெற்ற ஏராளமான போராட்டங்களுக்குப் பிறகு 200க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தாலே தண்டிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை நம் காலத்திலேயே பார்த்திருக்கிறோம். 

அதுவும் ஒரு பெண்ணரசி ஆட்சி செய்த காலத்திலேயே தமிழ் கூறும் நல் உலகில் இந்த கேவலத்தை கண்டோம். கணவனின் திருட்டு குற்றத்திற்காக சிதம்பரத்தில் பத்மினி என்ற பெண்மணி காவல் நிலையத்தில் கற்பழிக்கப்பட்ட கொடுமையையும், அதன் விளைவாக நடந்தது போராட்டங்களின் பின்னணியில் லத்திகா சரண் என்ற காவல்துறை பெண் அதிகாரி விசாரணை நடத்தி குற்றத்தை உறுதி செய்து, காவல் துறை அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் தண்டனை பெற்று தந்த நிகழ்ச்சியும் நம் காலத்தில் நடந்தது. இத்தகைய பெண்களுக்கெதிரான வன்முறை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும், ஒரு நாள் நிகழ்வாகவோ, பல நாட்களாகவோ நடைபெற்ற தாக்குதல்கள் வாழ்நாள் முழுக்க உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு உண்டாக்கக்கூடிய பேரழிவு கொடுமை இது. 

உலகில் சரி பாதி எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும் கல்வி அறிவும் நாகரிகமும் பெருத்து விட்ட இந்த காலத்திலே கூட உலகெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கெலும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகள் எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நாள் சர்வதேச அளவில் கொண்டாடப்படுவதின் பின்னணி இதுதான். 


டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிரபல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராக இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள்.

 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னால் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரானவர்கள் வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 

1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை வன்முறை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி முடிவடையும்.

இந்த நாளில் பாலின சமத்துவத்திற்காகவும் சம உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் சமதர்ம கோட்பாடுகளுக்காகவும் உழைக்கின்ற அனைவரும் பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்போம். 


... சற்றே தாமதமாக கட்டுரை வெளியிடுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.... 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...