சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 18 November 2024

சினிமா பைத்தியங்கள்

 மதுரை சினிமா பைத்தியங்களின் முக்கிய நகரமாக இருந்தது என்று நான் சொன்னால் நிச்சயமாக உங்களுக்கு கோபம் வரும். இல்லையா.. . Cinema Fans சினிமா விசிறி என்று சொல்லுகிறார்களே அதன் அர்த்தம் என்ன தெரியுமா? Cinema Fanatics என்பதன் சுருக்கம் தான் Cinema Fans சினிமா ஃபேன்ஸ் (சினிமா விசிறி) என்று ஆனது.

சரி. அதற்கும் மதுரை சினிமா பைத்தியங்களை நகரம் என்று சொன்னதற்கு என்ன நியாயம் என்று யோசித்துப் பார்க்கலாம்.நான் எல்லா சினிமா ரசிகர்களையும் சினிமா பைத்தியம் என்று சொல்லவில்லை. சினிமா பைத்தியங்கள் நிறைந்த நகரம் என்று தான் சொல்கிறேன். 

எனது சின்ன வயதில் பரமேஸ்வரி தியேட்டருக்கு ஆங்கில படம் காண செல்வோம். அங்கு ஹாலிவுட் நடிகர்  ஜேம்ஸ் பாண்ட் சீன்காணரி ரசிகர் மன்றத்திற்கான மிகப்பெரிய புகைப்படம் கண்ணாடி பிரேமிட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்ததை பார்த்திருக்கிறேன். அதேபோல அநேகமாக எல்லா நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றம் வைத்திருந்த ஊர் மதுரையாக தான் இருக்கும். எனது நண்பர் ஒருவர் கூட மூன்று நான்கு நடிகர்களின் ரசிகர் மன்ற லெட்டர் பேடுகளை வைத்திருந்ததை நானே பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு ரசிகர் மன்றம் இருப்பதாக அந்த நடிகர் நடிகைகளுக்கு தெரியுமா என்று தெரியாது. ஒரு நண்பர் விஜயலலிதா ஜோதிலட்சுமி ஆகியோருக்கு கூட ரசிகர் மன்றம் வைத்திருந்தார். நாங்கள் குடியிருந்த வீட்டின் அருகில் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் ரசிகர் மன்றம் என்று ஒன்று இருந்தது அந்த மன்றத்தின் சார்பாக நேரடியாக ஜெய்சங்கரை போய் சென்னையில் சந்தித்து வந்ததை கதை கதையாக அவர்கள் பீற்றிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். சின்னஞ்சிறு நடிகர்களுக்கே ரசிகர் மன்றம் வைத்திருந்த காலத்தில் பிரபல நடிகர்களான எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் எப்படி எல்லாம் கூத்தடித்திருப்பார்கள்.

மதுரையில் சினிமா பட விளம்பரங்கள் மிக வேடிக்கையாக செய்து இருப்பார்கள். ஒரு திரைப்படம் வந்தால் தியேட்டரில் மிகப்பெரிய கட்டவுட் வைப்பது,  தெருவெங்கும் போஸ்டர் ஓட்டுவது என்பது சகஜமான ஒன்று. ஆனால் அதைத்தாண்டி மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டிகளிலும் திரைப்படத்திற்கான விளம்பர தட்டி வைத்து, இரவு நேரங்களில் பெட்ரோமாக்ஸ் லைட்டை தலையில் வைத்துக் கொண்டு முன்னால் பேண்ட் வாத்தியம் அல்லது ஏதாவது வாத்தியம் வாசித்துக் கொண்டு தெருவெங்கும் ஊர்வலமாக போய்  நோட்டீஸ்கள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

1929 மதுரை இம்பீரியல் தியேட்டர் திரைப்பட விளம்பர வண்டி.

 சில நேரங்களில், குறிப்பாக படம் வெளியிடும் காலங்கள் அல்லது வெள்ளி விழா காலங்களில் கரகாட்டம் போன்று ஏதாவது ஆட்டம்பாட்டங்களுடன் விளம்பரங்கள் நடைபெறும். ரசிகர் மன்றங்கள் சேர்ந்து விட்டால் கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது. சில நேரங்களில் எதிர் ரசிகர் மன்றங்களோடு மோதல் கூத்துக்களும் நடைபெறும். ஆதி காலத்தில் மதுரை சினிமா தியேட்டர் விளம்பரத்தை, தட்டி விளம்பரமாக கழுத்தில் மாட்டிக் கொண்டு நகரெங்கும் சுற்றி வந்த ஒரு பழைய வீடியோ தொகுப்பு ஒன்றை பார்த்திருக்கிறேன். 

அதே போல சினிமா தியேட்டரில் ரசிகர்கள் அடிக்கும் கூத்துக்கு எல்லையே இருக்காது.தாங்கள் விரும்பும் நடிகரின் திரைப்படம் வெளியாகும் நாள் அன்று அந்த படத்தின் ரீல் பெட்டிகளை  ஆட்ட பாட்டத்துடன் எடுத்து ஊர்வலமாகவருவார்கள்.வெடி வெடித்து கொண்டாடுவார்கள்.அந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.படம் தியேட்டரில்திரையிடும் போது தங்கள் நாயகரின்பெயரினை போடும்போது விசில் சுத்தம் காதைப்பிளக்கும்.ஜிகினா பேப்பர் துகள்களை விசிறியடிப்பர்.வெளிச்சத்தில் ஜெகஜோதியாய் இருக்கும்.எப்பொழுதாவது ரீல் அறுந்து விட்டாலோ ,கார்பன் விலகி வெளிச்சம் வராமல் திரை இருண்டாலோ,வசவுகள் விசில் சத்தங்கள் கதை பிளக்கும்.டிஜிட்டல் திரைப்படங்கள் வந்தபின் ரீல் அறுந்து போவதற்கு வாய்ப்பு இல்லை.  .

மேலே சொல்லப்பட்ட பல காட்சிகள் நான் கண்ணாற கண்டு ரசித்தது தான். கப்சா இல்லை...

மதுரையில் திரையரங்குகளில் முன்னோடியாக இருந்தவை   இம்பீரியல் டாக்கிஸ், சிட்டி சினிமா. இரண்டுமே மிகப்  பழமையானவை. 

            இம்பீரியல் டாக்கிஸ்.

இம்பீரியல் டாக்கிஸ் முக்கிய பிரமுகர்கள் கண்டு ரசித்த  திரையரங்கம். ஆனால் எங்கள் காலத்திலோ ஊரில் உள்ள மிகவும் குப்பையான தியேட்டராக இருந்தது. 

எங்கள் சிறுவயதில் இம்பீரியல் தியேட்டரில் டிக்கெட் 25 பைசா தான். ஆனால் ஒரு வினோதமான காட்சியை இங்கே காணலாம். மாடி முழுக்க பெண்களுக்கு ஒதுக்கி இருப்பார்கள். கீழேதான் ஆண்களுக்கு இடம். ஆனாலும்    மாடி டிக்கெட் கட்டணமும் 25 பைசா தான். பெண்கள்  பெரும்பகுதி  வரமாட்டார்கள். 

                              சிட்டி சினிமா

மதுரை சிட்டி சினிமா புகழ் பெற்ற தியேட்டராக இருந்திருக்கிறது.எம் கே டி தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி படம் சக்கை போடு போட்டியிருக்கிறது .அந்த லாபத்தில் தான் சிந்தாமணி  தியேட்டர் கட்டப்பட்டதாக பெரியவர்கள் சொல்லுவார்கள்.ஆதிகாலத்தில் புதிய திரைப்படங்கள் போடப்பட்டாலும் பிற்காலத்தில் பழைய படங்கள் மட்டுமே போடப்பட்டு ,பின் நடத்தமுடியாமல் மூடிவிட்டனர். 

   

சிந்தாமணி  தியேட்டர்
பின்னர் நியூ சினிமா ,சென்ட்ரல் ,தங்கம்,என்று நிறைய திரையரங்குகள் வந்து கொடிகட்டி பறந்தன .அவற்றுள் மிக முக்கியமானது தங்கம் திரையரங்கு ,ஆசியாவிலேயே மிக பெரிய திரையரங்கு என்று பெயர் பெற்றது.அந்த திரையரங்கில்  ஒரு படம் ஐம்பது நாள் ஓடினால்,மற்ற  திரையரங்கில்  நூறு நாள் ஓடியதற்கு சமம். அப்பேற்பட்ட திரையரங்கில் கூட்ட நெரிசலில் எம் ஜி ஆர் நடித்த கணவன் பட முதற்காட்சியில் ஒருவர் இறந்துவிட்டார் என்றால் ரசிகர் கூட்டம் எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். 

             

தங்கம் தியேட்டர்
மதுரையில் ஒரு சுவாரசியமான திரையரங்கு ஒன்று உண்டென்றால் அது ரீகல் தான்,பகலிலே விக்டோரியா ஹால் ஆக நூலகமாகவும் ,மாலையில் ரீகல் திரையரங்காகவும் செயல்படுகிறது.     
                      ரீகல் தியேட்டர்

அந்த காலத்தில் மதுரையில் பரமேஸ்வரி தியேட்டர்,  ரீகல் டாக்கீஸ், மிட்லெண்ட்தியேட்டர் ஆகிய திரையரங்குகளில் ஆங்கில படம் மட்டுமே போடப்படும். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபின் கட்டாயமாக தமிழ் படங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஆவது போட வேண்டும் என்று உத்தரவிட்ட பின்னர் நிலைமை மாறியது. 
இந்தி படங்கள், ஆங்கில படங்களுக்கு மதுரையில் அப்போது நிறைய  மவுஸ் இருந்தது. மொழி புரியவிட்டாலும் நிறைய கூட்டங்கள் கூடும். யாராவது ரெண்டு பேர் திடீரென்று சிரித்தால், மொத்த தியேட்டரும் சிரிக்கும். அதேபோல கை தட்டினாலும் எல்லோரும் கைதட்டுவார்கள். ஏன் என்று புரியாவிட்டாலும் இந்த கூத்துக்கள் நடைபெறும். படம் மிகவும் போர் அடித்தால் திடீரென்று எவனாவது ஒரு மகாத்மா காந்திக்கு ஜே... பருத்திப்பால்..... இந்த மாதிரி ஏதாவது அபத்தமான கோஷம் விடுவார். மொத்த தியேட்டரும் சிரிக்கும். இந்த மாதிரி கூத்துகள் சர்வசாதாரணமா நடைபெறும். 

அப்போதெல்லாம் ஹிந்தி பாட்டுக்கள் அநேகமாக எல்லா டீக்கடைகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதேபோல இசை கச்சேரிகளும் ஹிந்தி பாடல்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் தற்பொழுது அந்த நிலைமையில்லை. 
நான் மேலே கூறிய சினிமா கூத்துக்கள் அநேகமாக எல்லா இடங்களிலும் நடைபெற்று இருக்கலாமே. ஆனால் நான் கண்டவைகளை தான் குறிப்பிட்டுள்ளேன.  
சென்னை மாநகர மக்களுக்காவது பொழுது போக்குவதற்கு என்று மெரினா பீச் இருக்கிறது. 
 மதுரை மக்களுக்கு வேறு வழியே இல்லை. எனவே தான் சினிமா ஒரு பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. 
ஆனால் தற்பொழுது டிவியிலிருந்து, செல்போன் வரை ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டன. எனவே சினிமா பைத்தியக்காரத்தனங்களும் பொதுவாகிவிட்டன. 


 காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் கோலங்கள் என்னமோ இன்னமும் மாறவில்லை. சினிமா பைத்தியங்களுக்கும் குறைவில்லை..... 






Sunday, 10 November 2024

அபுதாபியில் காலை நடை பயிற்சி


 அபுதாபியில் காலை நடை பயிற்சி சென்றபோது எடுக்கப்பட்ட காட்சி இது

Friday, 8 November 2024

எரிகிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி .

 


எரிகிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி  என்று கேட்டால்,  எந்த கொள்ளியை நல்ல கொள்ளி என்போம். அதுபோலத்தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வந்தால் நல்லது என்று கேட்டால் யாரை சொல்வோம்.

நம் நாட்டில் உள்ள சில மேதாவிகள் ஐயையோ கமலா ஹாரிஸ் தோற்றுவிட்டாரே என்று பதறுகிறார்கள். டிரம்ப் வந்ததனால் இந்தியாவிற்கு ஆபத்து என்று பதறுகிறார்கள். இரண்டு பேரில் யார் வந்தாலும் ஒன்றுதான் இருவரின் கொள்கையும் ஒன்றுதான்.

கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளி பெண்.  ஒரு பெண் அதுவும் இந்திய வம்சாவளி பெண் வந்தால் நமக்கு பெருமை என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

ஒபாமா வந்தால் ஆப்பிரிக்க கருப்பினத்தை சார்ந்த ஒருவர் வந்துவிட்டால்,  கருப்பினத்தவருக்கும், ஆப்பிரிக்க குடிமக்களுக்கும், நல்லது நடக்கும் என்று நம்பி இருந்தார்கள் ஆனால்  அமெரிக்காவில் எந்த கருப்பினத்தவரோ அல்லது உழைக்கும் மக்களோ ஆப்பிரிக்க கருப்பினத்தவரோ முன்னேறியதாக எந்த நிகழ்வும் இல்லை. மாறாக பிற நாடுகளின் மீது அமெரிக்க யுத்த குறுக்கீடு அதிகபட்சம் நிகழ்ந்தது அவருடைய காலத்தில் தான்.

ஏனென்றால் அமெரிக்க தேர்தல்களை தீர்மானிப்பது அமெரிக்க ஆயுத வியாபாரிகள், நிதி நிறுவனங்களும் தான். அவைகளும் பெரும்பாலாக யூத முதலாளிகளின் கையில் தான் உள்ளன.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உள்ள இயற்கை வளங்களை சூறையாடுவதற்காக தாங்கள் விரும்பும் அரசாங்கங்களை உருவாக்குவதில் இருந்து, தங்களுக்கு பிடிக்காத அரசாங்கங்கள் வந்தால் அவற்றை கவிழ்ப்பதற்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாக்குவதும் சுரண்டுவது மட்டுமே அமெரிக்காவின் கொள்கைகளாக இருக்கின்றன.

அதற்காக நாடுகளுக்கிடையே ஆயுதப் போட்டிகளை உருவாக்குவதும், மோதல்களை ஊக்குவிப்பதும்,  யுத்தங்களை நிகழ்த்துவதுமே அமெரிக்காவின் கொள்கையாகும்.

இதற்காக எந்தவிதமான சாகச வேலைகளை செய்வதும் ஐக்கிய நாடுகள் சபையை தனது எடுபிடியாக வைத்துக்கொண்டு உலக நாடுகளின் மீது  மேலாதிக்கத்தை  செலுத்துவதுமே அமெரிக்க பெரு முதலாளிகளின் கொள்கையாகும்.

இதற்காக பல நாடுகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் நெடுங்கால கடன்களை கொடுத்து அந்த நாட்டின் செல்வத்தையும் சுயாதிபத்தியத்தையும் சூறையாடும் வேலையைத்தான் அமெரிக்கா செய்து கொண்டிருக்கிறது.

இதற்காக எந்த நாட்டிலும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிற வேலைகளை பலமுறை அமெரிக்கா செய்திருக்கிறது. இந்த வேலையை செய்வதற்கான சிறந்த வேலைக்காரர் யார் என்று போட்டி தான் எப்பொழுதுமே அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலாகும். அதில்  நிரந்தரமாக இருமுனைப் போட்டியாக தான் அமெரிக்க பெரு முதலாளிகள் வைத்திருப்பார்கள்.

இந்தப் போட்டியில் ட்ரம்ப் ஜெயித்தாலும், கமலா ஹாரிஸ் ஜெயித்தாலும் விளைவு ஒன்றுதான்.

எப்படி இன்ஃபோசிஸ் நாராயணசாமி மருமகன் ரிஷி சுனக் இங்கிலாந்தில் ஜெயித்ததால் இந்திய மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லையோ அதுபோல, கமலஹாரிஸ் ஜெயித்திருந்தாலும் இந்திய மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. நாம் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

 நம் வாழ்க்கைத் தரம் முன்னேற நாம்தான் போராடியாக வேண்டும்

Wednesday, 6 November 2024

அபுதாபியில்


 அபுதாபியில் உள்ள ஒரு மிருக காட்சி சாலைக்கு சென்று வந்தோம் அங்கு கண்ட  பழங்குடியினர் நடன காட்சி இது

அபுதாபியில் ஒரு சுரங்கப்பாதை


 அபுதாபியில் சாலைகளை கடக்க அமைந்துள்ள சுரங்க பாதைகள் மிக அழகாகவும் சுத்தமாகவும்  காட்சியளிக்கின்றன. நம் நாட்டில் எப்போது இது போன்ற காட்சிகளை காணப் போகிறோம்

Tuesday, 5 November 2024

இந்தி படிக்கப் போனேன்

 எனக்கு 12 வயது இருக்கும்போது, அதாவது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என் தூரத்து உறவினர் அண்ணன் முரளிதரன் என்னுடன் தியாகராஜர்  நன்முறை உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். என் அப்பாவும் அவரது அப்பாவும் மிக நெருங்கிய நண்பர்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்காலத்தில் இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் அதனால் என் மகன் முரளிதரன் இந்தி படித்துக் கொண்டிருக்கிறான். நீங்களும் உங்கள் பையனை படிக்கச் சொல்லுங்களேன் என்று சொல்லி இருக்கிறார். அதனால் என் அப்பாவும் என்னையும் இந்தி படிக்கச் சொன்னார்.

எனக்கு ஹிந்தி என்றாலே ஒரு பயம். எனக்கு 6, 7 வயது இருக்கும் போது போது  மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்தது. என் வீட்டின் அருகே சிவாஜிகணேசன் ரசிகர் மன்ற படிப்பகம் இருந்தது. அவர் காங்கிரஸ்காரர். எனவே ஒரு காங்கிரஸ் கொடிக்கம்பமும் நடப்பட்டு காங்கிரஸ் கொடியேற்றப்பட்டிருந்தது. அப்பொழுதெல்லாம் மதுரையில் நிறைய படிப்பகங்கள் இருந்தன. கட்சி சார்புள்ளதாகவும் கட்சி சார்பற்றும் படிப்பகங்கள் நடைபெற்று வந்தன. அதில் தினசரி பத்திரிகைகள் போடப்பட்டிருக்கும். கூடவே குமுதம் கல்கி ராணி போன்ற வார பத்திரிகைகள், பேசும் படம் பொம்மை போன்ற சினிமா பத்திரிகைகள் எல்லாம் போடப்பட்டிருக்கும். பத்திரிகைகள் படிக்க எல்லோரும் வந்து போவார்கள். நாங்கள் சிறுவர்களும் சினிமா பத்திரிகைகளையும், வார பத்திரிகைகளையும் படிக்க அல்லது  படிப்பது போல படம் பார்ப்பதற்கு  செல்வோம்.புத்தகத்தை கிழித்து விடுவோம் என்று  பெரியவர்கள் எங்களை துரத்தி விடுவார்கள். இருந்தாலும் ஓரளவுக்கு எழுத்துக்கூட்டி படிப்பதற்கு இந்த படிப்பகங்கள் உதவியாக இருந்தன 

அந்த நேரத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது  போலீஸ் தடியடி காரணமாக மாணவர்கள் பலர் காயம் பட்டதாலும் துப்பாக்கி சூட்டில் இறந்ததாலும் மாணவர்கள் கொந்தளித்து கலவரங்களில் இறங்கினர். ஆங்காங்கே  மாணவர்களும் இந்தி எதிர்ப்பாளர்களும் திரண்டு அலுவலகங்களையும் சிவாஜி ரசிகர் மன்ற படிப்பகங்களையும் சூறையாடி கொடி மரங்களை பிடுங்கி எறிந்து தங்கள் எதிர்ப்பினை  காட்டிக்கொண்டிருந்தனர் . 

ஒரு நாள் மாலை ஏராளமான எங்கள் வீட்டில் அருகில் இருந்த சிவாஜி ரசிகர் மன்றமும் சூறையாடப்பட்டு கொடிக்கம்பம் பிடுங்கி எறியப்பட்டது. எங்கள் வீட்டில் இருந்த பெரியவர்கள் எங்களை வெளியே வராமல் வீட்டுக்குள் அடைத்தனர்.  ஜன்னல் வழியாக இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம். 

பிறகு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காட்சிகள் மாறின. இந்தி கட்டாயம் படிக்க வேண்டியதில்லை என்று நிலை வந்து. ஆனால் இந்தி படிப்பதற்கு தடை ஏதும் ஏற்படவில்லை. விருப்பமுள்ளவர்கள் படித்துக் கொள்ளும் சூழல் இருந்தது. இருந்தாலும் எனக்கு ஹிந்தி படிக்க பெரிய அளவுக்கு ஆர்வம் ஏற்படவில்லை. 

முரளி அண்ணன் ராமநாதபுரம் சாலையில் அமைந்துள்ள சௌராஷ்டிரா உயர்நிலைப் பள்ளிக்கு எதிர் சந்தில் இருந்த தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார சபா நடத்தக்கூடிய ஒரு ஹிந்தி பள்ளிக்கு காலை ஒரு மணி நேரம் படித்துவிட்டு பள்ளிக்குச் சென்றார் என்னையும் அங்கு பிரார்த்தனை படிக்க பிராத்மிக் படிக்க சேர்த்து விட்டார்.

எங்கள் தியாகராஜர் நன்முறை உயர்நிலைப்பள்ளி பத்து மணிக்கு ஆரம்பித்தாலும் ஒரு மணி நேரம் முன்னதாக ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவதால் ஒன்பது மணிக்கு பள்ளிக்கு செல்ல வேண்டும். நான் முனிச்சாலையிலிருந்து தெப்பக்குளத்திற்கு நடந்தே தான் பள்ளிக்கு வர வேண்டும். 9 மணி பள்ளிக்கு 8 மணிக்கு கிளம்பினால் தான் தாமதம் இல்லாமல் போய் சேர முடியும். இதில் இந்தி படிப்பதற்கு ஒரு மணி நேரம் என்றால் 7:00 மணிக்கே கிளம்ப வேண்டும். ஒரே வெறுப்பு. வேறு வழி இல்லாமல் கிளம்பி சென்றேன். 

அங்கு பெரும்பாலும் சௌராஷ்டிர இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தான் அதிகம் இந்தி படிக்க வருவார்கள் மற்றவர்கள் மிக மிக குறைவு.இயற்கையாகவே சவுராஷ்டிரா மக்களுக்கு இந்தி கற்றுக்கொள்வதில் அதிக சிரமம் இருக்காது.அவர்களது தாய்மொழி ஓரளவிற்கு இந்தியோடு ஒத்துப்போவதால் அந்த சிறுவர்கள் வேகமாகவும் நன்றாகவும் கற்று தெரிவார்கள்.நமக்கு கொஞ்சம் பொறாமையாகவும்,எரிச்சலாகவும் இருக்கும்.அவர்கள் புத்தகத்தின் பாதிப்பகுதிக்கு செல்லும்போது என்னால் ஓரிரண்டு பாடங்கள் கூட முடிக்க முடியவில்லை. காலையிலேயே வேகமாக சென்று இந்தி படித்துவிட்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை.அடிக்கடி இந்தி வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு பள்ளிக்கு எதிரில் உள்ள தெப்பக்குளம் மைய மண்டபத்தில் உட்கார்ந்து பொழுதை ஒப்பேற்றிவிட்டு பள்ளிக்கு செல்வது வழக்கமாகி விட்டது.

இடை இடையே இந்தி வகுப்புக்கும் சென்று வருவேன். மட்டம் போடுவது முரளி அண்ணன் மூலமாக வீட்டிற்கு தெரிந்து விட்டால் சிக்கல் ஆகிவிடும் என்று அவ்வப்போது போய் வருவேன். எப்படியோ பிராத்மிக் படிப்பு முடிந்து பரீட்சை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேறு வழி இல்லாமல் பணம் கட்டி பரீட்சை எழுத சென்றேன் சேதுபதி பள்ளிக்குச் சென்றேன். விடைத்தாளில் எனது பெயரை தவிர வேறு எதுவும் உருப்படியாக எழுத தெரியவில்லை. பக்கத்தில் இருப்பவர்களை எட்டிப் பார்த்து சில பதில்களை எழுதினேன். அப்புறம் கேள்விகளை எழுதி பக்கத்தை நிரப்பி கொடுத்து வந்தேன். தேர்வு முடிவு வந்த பிறகு தான் நான் இந்தி படித்த லட்சணம் அப்பாவுக்கு தெரிந்தது 200க்கு 5 மதிப்பெண்கள் எப்படியோ பெற்றுவிட்டேன். அத்தோடு இந்தி படிப்புக்கு மூட்டை கட்டி ஆகிவிட்டது...

அப்பாவுக்கு வருத்தம் தான், இருந்தாலும் திட்டவில்லை. ஆனால் பிற்காலத்தில் நான் எப்பொழுதாவது தொலைதூரக் கல்வியில் படிக்கலாம் என்று அப்பாவிடம் கூறும் போது இந்தி படித்தது மாதிரி ஆகிவிடாதே என்று கிண்டல் அடிப்பார் அவ்வளவுதான்.

நாம் தான் ஒழுங்காக இந்தி படிக்கவில்லையே என்று வருத்தப்பட்டு என் மகனை இந்தி படிக்க சேர்த்து விட்டேன்.அவனும் என்னுடைய கட்டாயத்தால் ராஷ்ட்ர பாஷா வரை படித்தான்.அவனது படிப்பிற்கு இடைஞ்சல் என்று அதோடு நிறுத்திவிட்டான்.ஒரு அல்ப சந்தோசம் கிடைத்தது.

பிற்காலத்தில் எனது நாற்பதாம் வயதில் டெல்லியில்  பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்தது..எல்லோரும் பயமுறுத்தினார்கள் இந்தி தெரியாமல் என்ன செய்யப் போகிறாய் என்று. சரி பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டேன்.நண்பர் சுதந்திரராஜன் சார் தான் சொன்னார், அது பெரிய விஷயமில்லை.தேவை ஏற்படும்போது எளிதில் கற்றுவிடுவோம் என்றார் . 

ரயிலில் ஆந்திராவை கடக்கும்போது சாதாரண கடலை மிட்டாய் இருப்பவனிலிருந்து தேநீர் சிற்றுண்டி விற்பவன்  வரை எல்லோரும்  நன்றாய் இந்தியில் பேசினார்கள்.நான் அங்கு சென்ற பிறகு என்னுடன் பணிபுரியும் தங்கப்பன் பிள்ளையோடு தேநீர் சாப்பிட கடைக்கு சென்ற போது,கடையிலிருந்து இந்தி பத்திரிக்கையை எடுத்து கடகடவென்று எழுத்து கூட்டி படித்தேன்.ஆனால் எனக்கு அர்த்தம் தெரியாது.எழுத்து கூட்டி படிக்க மட்டுமே தெரியும்.படித்தபின் அர்த்தம் தெரியாமல் அவரிடம் கேட்டேன்.அவர் சிரித்தவாறே பேசுகிற நடைவேறு .எழுத்து நடைவேறு .சுத்தமான இந்தியில் பேசினால் பைத்தியக்காரப்பட்டம் தான் கிடைக்கும் என்றார்.

என்னுடைய நண்பர் ராஜேந்திர சிங் தான் அடிக்கடி கூறுவார். லண்டனில் போய் சுத்தமான இலக்கிய ஆங்கிலத்தில்  பேசினால் கையில் சில்லறையை வைத்துவிட்டு செல்வார்கள்.அதாவது பிச்சைக்காரன் பாவம் என்பது போல .

எங்கள் ஆசிரியர் பொன்பாண்டியன் தான் அடிக்கடி சொல்லுவார்.மொழி என்பது கருத்துக்களை,எண்ணங்களை  வெளிப்படுத்தும் சாதனம் மட்டுமே .தேவை இல்லாமல் பயப்படக்கூடாது.நடைமுறை வாழ்க்கையில் உள்ள மொழி முக்கியம்.ரயிலுக்கு  டிக்கெட் முன்பதிவு செய்ய கவுண்டரில் போய் நின்று  "அய்யா சென்னைக்கு அதிவிரைவு புகையிரதத்தில் குளிர்பதன முதல் வகுப்பில் படுத்து செல்வதற்கான  பயணம் செல்வதற்கு முன்பதிவு செய்ய உதவுங்கள்"என்று சுத்தமான ,பிழையில்லாத மொழியில் கேட்டால் என்ன கிடைக்கும்.  என்று நினைத்துப்பாருங்கள் என்பார்.

தங்கப்பன் பிள்ளையும் அதையே தான் சொன்னார்.அய்யா நன்றாய் இலக்கணத்தோடு படியுங்கள் தப்பில்லை,ஆனால் மொழியை முறையாய் படித்து வந்தால் தான் வெளியூருக்கு வேலைக்கு போக்கமுடியும் என்றால் அது பைத்தியக்காரத்தனம் என்றார்.எல்லா ஊரிலும் வேலைக்கு போனபின்னர் தேவையின் காரணமாகவே கற்றுக்கொண்டவர்கள் தான் மொத்தபேரும் என்றார் .


ஆனால் இன்னமும் நிறைய பைத்தியங்கள் இந்தி படித்தால் தான் வேலைக்குப் போக முடியும்  என்கின்றனவே ..என்ன செய்ய.


ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...